ஈழம்

ஈழம்

வியாழன், 9 ஏப்ரல், 2015

சமர்கள நாயகனுக்கு சளைக்காத சீடன் பிரிகேடியர் தீபன்

அனைத்து உலக நாடுகளின் உதவியுடனும்,பாரிய படைக்கலன்களுடனும், எம் இனத்தை அழித்துக் கொண்டிருந்த சிங்கள இனவெறியர்களை முழுப் பலத்தையும் பிரயோகித்து புதுக்குடியிருப்பு ஆனந்தபுரப்பகுதியில் இடை மறித்தார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.

ஆக்கிரமிப்பாளர்களின் அரக்கத்தனமான கொடும் யுத்தத்தை மனோபலத்துடன் எதிர் கொண்டார்கள் விடுதலைப்புலிகள். யுத்தகளங்களில் பயன்படுத்த, தடை செய்யப்பட்ட பல விதமான ஆயுதங்களாலும், போர் விமானங்களாலும், ஆட்லெறிகளாலும் பரவலாகத் துடைத்தெறிந்து முன்னேறியது சிங்கள இராணுவம்.


விடுதலை அல்லது வீரச்சாவு என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தபடி ஒவ்வொரு போராளிகளும்,பொறுப்பாளர்களும், தளபதிகளும் அக்களத்தில் சாதனை படைத்தனர். பல நூற்றுக்கணக்கான இராணுவத்தைக் கொன்று குவித்தனர். உண்ண உணவு இல்லை, குடிக்க தண்ணீர் கூட இல்லை அனைத்து உதவிகளும் தடை செய்யப்பட்ட நிலையில் தமக்கேற்பட்ட சோர்வைக் கூட மறந்த  நிலையில் தம்மிடம் இருந்த வளங்களை வைத்து சாவின் உச்சகட்டத்தில் கூட  தர்மயுத்தம் நடத்தினார்கள். அக்களத்தில் போரிட்ட ஒவ்வொரு வீரர்களுடைய அழிக்க முடியாத வரலாறுகளும் அவர்களுடைய செங்குருதிகளால்  அந்த மண்ணில் பதியப்பட்டது .

“என்னைக் காப்பாற்ற வேண்டாம், என்னை விடுங்கோ இந்த சிங்களவனை பழி வேண்டணும்”என வீரச் சாவடையும் தருணத்தில்க் கூட ஒலிக்கிறது தளபதி தீபனின் குரல். போர்க்களகளில் போராளிகளோடு வாழ்ந்த அந்த தளபதி ஆனந்தபுரத்தில் ஆவேசமானார். அதர்ம யுத்தம் நடந்தும் அரக்கர் கூட்டத்தை அழித்தொழித்து சாவேனே தவிர மண்டியிட மாட்டேன் என சபதம் பூண்டார். சிங்கள  இராணுவம் நடத்தும் யுத்த மழையை எதிர்த்து ஒரு பகுதியால் தீபனும் அவர் போராளிகளும் சண்டை செய்து கொண்டிருக்கிறார்கள். இயங்கவே முடியாத அளவுக்கு தீபன் பலத்த காயம் அடைகிறார். அவரைக் காப்பாற்ற முயல்கிறார்கள் போராளிகள். தன்னைக் காப்பாற்ற வேண்டாம் என கத்தியபடி எதிரியை நோக்கி ஆவேசமாகத் தாக்குதல் நடத்தி வீரச்சாவடைகிறார் பிரிகேடியர் தீபன்.

எதிரிக்குத்  தலைவலியாக இருந்த தீபனை, போராளிகளுக்குப் பக்க பலமாக இருந்த தீபனை, தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. போர்க்களங்களில் ஓயாத புயலாக சுழன்றடிக்கும் தீபனை எதிரி நன்கறிவான். தீபனின் கட்டுப் பாட்டில் இருக்கும் பிரதேசத்தை எட்டிப் பார்க்கவே பயப்படுவான் எதிரி.  போராளிகளை ஊக்குவித்து அவர்களை யுத்த களத்தில் எப்பவுமே மகிழ்ச்சியாக வைத்திருக்கும் தளபதி தீபனை அனைத்துப் போராளிகளுக்கும் பிடிக்கும். அவருடைய கட்டளைக்காகக் காத்திருப்பார்கள் போராளிகள் .

கள நிலவரங்களை அதி வேகமாகப் புரிந்துகொண்டு அதிரடி முடிவுகளை எடுத்து, எதிரியை திணறடிக்கும்   பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வழிகாட்டலைப் பின்பற்றி வளர்ந்த தீபன் அவர்கள்,  சாள்ஸ் அன்ரனி படையணியை  வழிநடத்தி  நல்ல வழிகாட்டியாக , நல்ல போர்த்தளபதியாக உயர்ந்து , கட்டளைத்தளபதியாகப் பணிபுரிந்தார் .பல சாதனைகளுக்கும்,பல வெற்றிகளுக்கும் காரணமாய் இருந்த தீபனுக்கு தமிழீழத்தில் தனி வரலாறுண்டு . எதிரிக்கு சவால் விட்டு, போர் புரியும் தீபன் சந்தித்த களங்கள் பற்பல. சாதனைகளோடு வாழ்ந்த அந்த வீரனின் சாதனைகள் என்றென்றும் பதியப்பட வேண்டியவை. தமிழினத்தால் படிக்கப்பட வேண்டியவை.


சாதனை வீரனே பிரகேடியர் தீபன்
உங்கள் கனவு நனவாகும் வரை
தொடர்வோம் உங்கள் தடம் ………

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us