ஈழம்

ஈழம்

வெள்ளி, 23 நவம்பர், 2012

கேணல் பரிதியின் வீர வரலாற்று குறிப்பு.

கேணல் பரிதி
நடராஜா மதீந்திரன்
தமிழீழம் யாழ் மாவட்டம்
வீர பிறப்பு:26-10-1963
வீரச்சாவு:08-11-2012

மரணத்தை நேசித்தபடியே எதிரிக்கு சிம்ம சொர்பணமாய்!

2009 மே 17 ம் திகதிக்கு பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டம், சோர்வும், பயமும், துன்பநினைவுகளும் , ஆற்றாமையும், விதிவசம் என்னும் மனப்பான்மையும் கொண்டிருந்த மக்களை அவர்களின் மனச்சிறையில் இருந்து விடுவித்து எம்மால் விடுதலையை அடைய முடியும் என்ற போர்க்குணத்தை ஏற்படுத்திய பெருவீரனாக திகழ்ந்தவன் தான் தளபதி பருதி..

அமைதியான ஒரு முகம்
அனைவரையும் அரவணைக்கும் பண்பு
கொள்கையில் பற்று
கோபத்திலும் தாய்மை உணர்வு
இலட்சியத்தில் உறுதி
இறுதிவரை தாயக விடுதலைக்கான பணி,
இதுவே இவனது அடையாளம்..!

1983-ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் விடுதலைக்காக தம்மை அர்பணிக்க துணிந்த இளைஞர்களுள் பருதியும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த திருநெல்வேலி தாக்குதலின் விளைவாக விடுதலையில் தன்னை அர்பணித்த மனிதன் தான் பரிதி என்கின்ற மாவீரன்.

அன்று 1980 களில் தமிழர் தாயகத்தில் இன அழிப்பு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதிந்திருந்த நேரம். எமது இயக்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகளின் சாட்சியாக இருந்தவர். மக்களுடன் மக்களாக தலைமறைவு வாழ்வில் எமது இயக்கம் வாழ்ந்த காலங்களில் எமது போராளிகளுக்குப் பெரும் பலமாக இருந்து செயற்பட்டவர்.

அன்றைய காலங்களில் கண்ணிவெடி உட்பட்ட வெடிபொருள் உருவாக்கத்தில் முன்னின்று செயற்பட்டவர். அன்றைய நாட்களில், விடுதலை வெறிபிடித்த எமது போராளிகளினிடையே கடமை உணர்வை மட்டுமே கருத்தாகக் கொண்டு, சிங்களப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி எமது தலைவர் உட்பட்ட ஆரம்பகாலப் போராளிகளைக் காத்து வந்தார். தாக்குதல்கள் மற்றும் ஏனைய தேவைகளுக்கான நகர்வுகளுக்குத் தேவையான பொருட்களை மக்களிடமிருந்து ஒழுங்கு செய்து, எவரும் சந்தேகம் கொள்ளாதவாறு போராளிகளுக்குரிய வசதிகளை ஒழுங்கு செய்வதென அன்றைய காலங்களில் முக்கியத்துவமான பணிகளை முன்னின்று செய்து முடிக்கும் செயல் வீரனாகத் திகழ்ந்தார்.

எமது போராட்டத்தின் ஆரம்ப காலப் பகுதியில் தாயகத்தில் களப்பணி புரிந்த பருதி அதன் பின்னான காலங்களில் இந்தியாவிற்குப் பயிற்சிக்குச் சென்ற போராளிகளுடன் ஒருவராக இணைந்திருந்தார். இந்திய மண்ணில் அவர் பெற்ற பாசறைப் பயிற்சிகள் பின்னாளில் போர்களத்தில் எதிரியை துவம்சம் செய்வதிலும் , போராளிகளை உருவாக்குவதற்கும் பெரிதும் துணை புரிந்ததோடு மட்டுமல்லாமல், பரிதியையும் சிறந்த போர் வீரனாகவும் அடையாளம் காட்டியது.

போர் களப்பாசறைகளில், படை நடத்துவதில் வல்லமை பொருந்திய பருதி விழுப்புண் அடைந்ததன் விளைவாக களமுனையில் எந்தப் பணியாற்றவும் அவரால் முடியாதிருந்தது. என்றாலும் அவரது இலட்சியப் பற்று காரணமாக எமது வரலாற்றுப் பெருமைக்குரியவராய் அவர் இருந்தார். அவரது அந்த அர்ப்பணிப்புத்தான், அவரை புலத்திலும் விடுதலைக்குப் பணியாற்றுவதற்கான காரணியாக அமைந்தது.

இலட்சியப் பயணத்தை புலத்திலும் எதிரி முடக்க நினைத்தபோது வீறுகொண்ட வேங்கையாக எழுந்த பருதி போர்க்குணம் மிக்க புலம்பெயர் தமிழரை ஒருங்கிணைத்து விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் அயராத பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயல்பட்டார்.

மலையளவு சுமைகளையும் கடுகளவாய் ஆக்கி எதிரிக்கு சிம்ம சொர்பணமாய் திகழ்ந்த இவன் மீது எதிரி மேற்கண்ட புலனாய்வு நடவடிக்கைகள் , கொலைவெறித் தாக்குதல்கள் என்று, தொடர்ந்த போதும் மரணத்தை நேசித்த படியே மக்களுக்கான மகத்தான பணிகளை மேற்கொண்ட வண்ணமே இருந்தார்.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல என முழக்கமிட்டபடியே உலகத் தமிழினத்தை ஒருங்கிணைத்து எதிரிக்கு தக்க பதிலடி கொடுப்போம் என சொல்லால் மட்டுமல்ல செயலாலும் உறுதியுடன் செயற்பட்ட பருதி அவ்வப்போது கொலைவெறி கொண்டலையும் கொடியவரின் வன்முறைகளை உடலாலும் உள்ளத்தாலும் எதிர்கொண்டபடியே செயலாற்றினார்.

“ஆங்கிலக் கல்வியின் விளைவுகளால் புத்தகப் படிப்பை புலமையாக ஏற்றுக்கொண்ட தமிழ்ச் சமுதாயம் ஒன்றில், யார் புத்திஜீவி என்பது பற்றிய மயக்கம் இன்னமும் பலரிடையே உள்ளது. அவர்கள் தம் மனச் சிறையில் இருந்து வெளியேறும்வரை உண்மையான புத்திஜீவிகளை இனம் காணமாட்டார்கள். மனித வரலாற்றில் பெரும் மாற்றங்கள், பாய்ச்சல்கள் ஏற்பட்ட போதெல்லாம் அவற்றின் பின்னால் உள்ள ஆளுமைமிக்க, ஆற்றல்மிக்க மனிதர்களைச் சந்திக்கின்றோம். தமிழீழ விடுதலைப் போராட்டம், சோர்வும், பயமும், துன்பநினைவுகளும் , ஆற்றாமையும், விதிவசம் என்னும் மனப்பான்மையும் கொண்டிருக்கும் சூழலில் மக்களை அவர்களின் மனச்சிறையில் இருந்து விடுவிக்க எம்மால் முடியும் என்ற போர்க்குணத்தை ஏற்படுத்தியது பருதி போன்றவர்களின் தியாகம் மிக்க செயற்பாடுகள் என்றால் மிகையாகாது. முள்ளிவாய்க்காலின் பின்னரான அண்மைய நிகழ்ச்சிகளால் மனம் ஒடிந்து வாழும் தமிழ்ச் சமுதாயம் இவை பற்றி சிந்தித்து, பேசி, செயல்படும் காலமிது…” என அடிக்கடி விவதித்து தேசிய விடுதலைப் போரின் எழுச்சிக்கு உரமூட்டிய ஓர் உன்னதமான செயல்வீரன் தான் பருதி..

இத்தாலிய நாட்டின் புகழ் பெற்ற புரட்சிகர தத்துவ ஞானியும் ,புத்திஜீவியுமான அன்ரோனியொ கிறாம்சி ( Antonio Gramsci -1889-1937) அறிவுலகம் அதிகாரவர்க்கத்துடன் கைகோர்ப்பதைக் கண்டித்தவன். அதற்காகச் சிறைவாசத்தை அனுபவித்தவன்.

புத்திஜீவி பற்றி கூறிய கிறாம்சி,

“ஒரு புரட்சிகரமான புத்திஜீவி அந்தப் போராட்டத்தின் உள் இருந்து உருவாக வேண்டும். வெளியில் இருந்து திணிக்கப்படக் கூடாது”

என்று கூறினார்.

ஆங்கிலக் கல்வியின் விளைவுகளால் புத்தகப் படிப்பை புலமையாக ஏற்றுக்கொண்ட தமிழ்ச் சமுதாயம் ஒன்றில், யார் புத்திஜீவி என்பது பற்றிய மயக்கம் இன்னமும் பலரிடையே உள்ளது. அவர்கள் தம் மனச் சிறையில் இருந்து வெளியேறும்வரை உண்மையான புத்திஜீவிகளை இனம் காணமாட்டார்கள்.

மனித வரலாற்றில் பெரும் மாற்றங்கள், பாய்ச்சல்கள் ஏற்பட்ட போதெல்லாம் அவற்றின் பின்னால் உள்ள ஆளுமை மிக்க , ஆற்றல் மிக்க மனிதர்களைச் நாம் சந்திக்கின்றோம்.

ஊர் வாழ உறவு வாழ
உற்றம் சுற்றம் உரிமையோடு வாழ
வீரமறவர்களாக வேங்கையின் மைந்தனாக
மானிடத்தின் அதி உச்ச ஈகமாக

எதிரிகளின் தமிழின அழிப்பு கூட்டுச்சதியில்

நெருப்பாற்றிலும் துரோகத்தனங்களையும்
எதிர் கொண்டு எம் மறவர் நிற்க,

அண்மைய நிகழ்ச்சிகளால் மனம் ஒடிந்து வாழும் தமிழ்ச் சமுதாயம் இவை பற்றி சிந்தித்து, பேசி, செயல்படும் காலமிது. என அரசியல் சிந்தனையை ஊட்டிய உன்னதமான தலைவனாய் தேசிய விடுதலைக்காக நாடோடியாக செயல்பட்ட செயல் வீரந்தான் எங்கள் தளபதி. பருதி.. இத்தகைய செயல் வீரனாக செயற்பட்ட எமது இயக்கத்தின் மூத்த அங்கத்தவர்களுள் ஒருவரான பருதி அவர்கள் மீது பாரீஸ் புறநகர் பகுதியில் வைத்து சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகளால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் (08. 11. 2012) ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழ் சமூகத்தை கதிகலங்க வைத்துள்ளது.

பருதியின் இழப்பு ஈழத்தமிழினத்தின் ஆத்மாவை மாத்திரமல்ல, தமிழ்த் தேசியத்தின் ஆத்மாவையே பிழிந்த ஒரு சோக நிகழ்வு. மக்களால் மனதாரப் போற்றப்பட்ட அந்தப்பெரு வீரனை இனி எங்கு காண்போம் எனத் துடிகின்றனர் மக்கள். பல இழப்புக்களைக் கடந்து வாழ கற்றுக்கொண்ட மக்களிற்கு பருதியின் இழப்பு ஜீரணிக்கமுடியாத தொன்றாகவே இருந்தது. எனினும் தோல்விகளையும், இழப்புக்களையும் தனக்கான வெற்றியின் பாடமாக்கிக் கொள்ளும் தமிழீழ விடுதலைப்புலிகள் , பருதியின் இழப்பிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றார்கள். “பருதி நீ சாகவில்லை, ஒரு புதிய மூச்சாக பிறந்திருக்கிறாய்” எனக்கூறி தமிழினத்தை ஒரு வீரசபதம் எடுத்துக் கொள்ளும் இனமாக உருவாக்கியுள்ளனர்.

இன்றைய உலகில், 2009 மே 17 க்கு பின் தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் எவராலும் நிராகரிக்க முடியாத பெரும் வடிவம் எடுத்ததில் பருதியின் பங்கு இன்றியமையாதது. உலகெங்கும் சிதறி வாழ்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவதில் பருதி வெற்றி கண்டார் என்றே சொல்லவேண்டும். அந்த நிலை இன்று இன்னும் விரிவடைந்து மக்கள் -புலிகள் என்ற வேறுபாட்டை இல்லாதொழித்துவிட்டது. சர்வதேச சமூகம் விடுதலைப் போராட்டங்களையும், பயங்கரவாதத்துடன் இணைத்து தனது பிற்போக்குத் தனமான செயலை நியாயப்படுத்திவரும் வேளைகளில் கூட, உலகெங்கும் பரந்து நிற்கும் தமிழ் மக்கள் அந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் எழுச்சி கொள்கிறார்கள் என்றால் அது பருதியால் விதைக்கப்பட்ட விடுதலை குறித்த கருத்துருவாக்கமும் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணமாகின்றன என்றால் மிகையாகாது.

எமது இயக்கம் கெரில்லா அமைப்பாக இயங்கிய அந்த நாடகளில், சிறியரக ஆயுதங்களைக்கொண்டு பெரும் சாதனைகளை நிலைநாட்டிய அந்த ஒப்பற்ற வீரன் , இன்று புலம்பெயர்ந்த மண்ணில் தனது சாதனைத் தடங்களை தொடர்ந்தும் பதித்துக் கொண்டேயிருந்தான்.

கடந்த நவம்பர் 8 ஆம் தேதி இரவு படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளருமான கேணல் பரிதி அவர்களுக்கு, இலட்சியப் பயணத்தில் இறுதிவரை நடந்த அன்புத் தோழனுக்கு எங்கள் வீர வணக்கங்கள். ஊடகங்களில் தமிழரின் உண்மையான முகம் வெளியில் தெரியவேண்டும் என்பதில் பருதி அதிக அக்கறை காட்டினார். தமிழினத்தின் நியாயப் போராட்டங்களை பயங்கரவாதப்படுத்தி உலகெங்கும் பொய்யுரைக்கும் சிறீலங்கா அரச ஊடகங்களையும் அவற்றைச் சார்ந்து நிற்கும் சர்வதேச ஊடகங்களையும் கடந்து, உண்மையான செய்திகள் உலகெங்கும் தெரிவிக்கப்படவேண்டும் என்பதே அவர் கொண்டிருந்த எண்ணமாகும். அதற்காக அவர் எடுத்த முயற்சிகள் ஏராளம். தான் நேசித்த தேசத்தின் மீதும் அந்த மக்களின் மீதும் சிறுவர் நலன்பேணும் திட்டங்கள், கல்வி, அபிவிருத்தி, பொருண்மிய மேம்பாடு, சமூக மேம்பாடு என மக்கள் நலன்பேணும் திட்டங்களில் மாத்திரமன்றி, போர்களத்தில் மாண்டுபோன மாவீரர்களின் குடும்பங்களை பராமரித்தல், சிறையிலிருந்து மீண்ட போராளிகளுக்கு மறுவாழ்வு, மாவீரர்களான தளபதிகளின் குடும்பங்களைப் பொறுப்பெடுத்து வாழ்நாள் பணி செய்தல் என அவன் காட்டிய அதீத அக்கறையின் பயனாக இன்னும் எம்மண்ணில் இச் செயற்பாடுகள் பெரும் வளர்ச்சி பெற்ற நிலையில் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு மேலாக, ஒன்றுபட்ட தமிழினத்தின் எழுச்சியை இவர் கனவாகக் கொண்டிருந்தார். எதிரியின் இறுகிய பிடிக்குள்ளும் நிமிர்ந்து நின்று தமிழ் மக்கள் வெளிப்படுத்தும் உணர்வெழுச்சி பருதியின் கனவிற்கு கட்டியம் கூறிநிற்கின்றது.

தமிழர்களுக்கு எதிரான சிங்களத்தின் உண்மை முகத்தை சர்வதேசத்தின் முன் வெளிக் கொணர்ந்து தமிழர் தாயகம் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டு தமிழர்கள் சுதந்திரமாக தமிழர் தாயகத்தில் வாழ்வதற்கு நாம் அர்பணிப்போடு செயற்பட வேண்டும் என்ற வேணவாவும் கனவுமே அவனது சாவுக்கு ஒரு காரணமாக அமைந்தது.

எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் பருதி என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழினத்தின் ஆன்மாவில் அழிக்க முடியாததோர் இடம் அவருக்கு என்றுமுண்டு. எல்லையற்ற திறமைகளாலும் மக்கள் மேல் அவர் வைத்திருந்த உண்மையான பாசத்தினாலும் தமிழினத்தில் நீங்காத நினைவுகளை அவர் பதித்துச் சென்றிருக்கின்றார். இறுதி மூச்சு வரை தமிழினத்தின் தன்மானம் காத்து தமிழினத் தலைவனுக்குப் பெருமையைச் சேர்த்த அந்த ஒப்பற்ற வீரனை எந்நாளும் எவராலும் மறக்கமுடியாது.

எதிரிகளின் சவால்களை எதிர்கொண்டபடியே பணியாற்றிய அவரை இயன்றவரை பேணிப்பாதுகாக்க நாம் முயன்றோம். அதனால்தானோ என்னவோ எதிரியும் அவரது வாழ்வை முடிக்க விரும்பினான் போலும். இப்போது பருதி எங்களுடன் இல்லை. என்றாலும் அவர் எமது புகழ் பூத்த விடுதலை வரலாற்றில் என்றென்றைக்கும் வாழ்வாய்.

விடுதலை நெருப்பாய் கனன்ற வீரனே!
விடிவை நோக்கியே விரைந்த பறவையே!
விழிகள் மீதிலோர் நதியினைத் தந்தாய்.
வீழ்ந்து கதறுமோர் நிலையினைத் தந்தாய்
கயவர் படையினை கலக்கியடித்திடும்,
களத்திலாடியே கருவிகள் மீட்டதும்,

கோட்டையை மறித்தோர் அரணாய் நின்றதும்,
நேற்றுப்போலவே நெஞ்சினில் உள்ளது.
காலையும் மாலையும் கடமையை எண்ணியே,
கண் துயிலாது புலக் களத்தில் திரிந்தாய்!
விழுப்புண் அடைய்தாய் வீரனாய் திரிந்தாய்!

தன்னை இழக்கிலும் தாயகம் இழகிலோன்!
சத்தியம் செய்தாய், சங்கென ஆர்த்தாய்!
சண்டைக்களங்களில் சாதனை புரிந்தாய்!
தாயக மீட்பே குறியெனக் கொண்டாய்!
தன்னையே இன்று தற்கொடை ஈந்தாய்!

இங்கிவர் மேலும் தாக்குதல் புரியலாம்,
இருப்பவர் இன்னும் சூழ்ச்சிகள் செய்யலாம்
இன்னுமோர் எதிரி எதிர்வந்து நிற்கலாம்,
புலத்தினில் தமிழன் எரிந்து கருகலாம். – ஆயினும்

கண் போல நீ காத்த புலக் கட்டமைப்பு இது!
சிந்து குருதியால் நீ சேர்த்த பலமிது!
உந்தன் உறுதியை உயிரிலும் சுமந்தோம்!
பொங்கும் விடுதலைப் போரிலே வெல்வோம்.!

“உயிரைக் கொடுக்கத் தயாராய் இருக்கிறவர்களைத்தான் அவர்கள் வேட்டையாடுகார்கள்”

‘You know, it is those who are prepared to give their lives that they hunt.”

பருதி நீ விடுதலையின் தேரோட்டி…

உன்னோடு எங்கள் இலட்சியம் வெல்வதற்க்காய் இறுதி வரை நடந்தவன்..

2009 மே ற்கு பின்னரான மலை விழுந்த பேரதிர்வில் நீயும் நானும் இருவேறு முனைகளுக்கு இழுத்துச் செல்லப்பட்டோம்.

ஆனாலும் ஈழக் குருசேத்திர வீட்மர் தான் எனக்கும் உனக்கும் குருநாதர்.

குருகுலவாசத்தில் உன் உணர்வுகளை சுவாசித்தவன் என்பதனால்,

உன்னை என்னால் மறக்க முடியவில்லை.

பருதி…

பலருக்கு நீ எப்படியோ….. ஆனால்

எனக்கு நீ,

குருசேத்திரக் கர்னன்…

செஞ்சோற்றுக் கடனுக்காய்..

உன்னை வழியனுப்பி வைக்க வார்த்தைகள் வரவில்லை தோழனே..!


தமிழீழ தாயக விடுதலைக்காய் புலத்திலும் எதிரியுடன் களமாடி துரோகிகளின் திட்டமிட்ட செயலால் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அண்ணைக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

இலட்சியப் பயணத்தில் இறுதிவரை நடந்த என் அன்புத் தோழனுக்கு எங்கள் வீர வணக்கங்கள்.

என்றும் நினைவுகளுடன்.
கிருஸ்ணா அம்பலவாணர் -

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us