ஈழம்

ஈழம்

சனி, 1 டிசம்பர், 2012

புலித் தலைவருக்குப் பிடித்த அறிவுச்சிங்கம்! தேசத்தின் குரல்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு வயது 48. 'எங்கள் தாகம் தமிழீழத் தாயகம்’ என்ற முழக்கத்தோடு அவர் ஆயுதத்தைத் தூக்கி 30 ஆண்டுகள் முடியப் போகின்றன.

இலங்கையின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான வல்வெட்டித்துறை தான் பிரபாகரன் பிறந்த ஊர். இங்குள்ள வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்டிய திருமேனியார் வெங்கடாசலம் என்பவரின் மகனான திருவேங்கடம் வேலுப்பிள்ளைதான், பிரபாகரனின் அப்பா. 10-ம் வகுப்பு வரைதான் பிரபாகரன் படித்தார்.

இலங்கைத் தமிழர் மீது கொடூரமான தாக்குதல் தொடங்கிய காலகட்டம் அது... விதவைப் பெண் ஒருவரின் குடும்பம் சிங்கள வெறியர்களால் சீரழிக்கப்பட்ட கொடூரமும் பாணந்துறை என்கிற இடத்தில் இந்துப் பூசாரி ஒருவர் உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவமும்தான் இலங்கை அரசுக்கு எதிராகத் தீவிர எண்ணம் கொண்டவராக பிரபாகரனை மாற்றக் காரணமாகின.

ஒரு நாள் அதிகாலை 3 மணி, பிரபாகரன் வீட்டுக் கதவைத் தட்டுகிறது பொலிஸ். சத்தம் கேட்ட பிரபாகரன், புறவாசல் வழியாக வெளியே ஓட... பொலிஸ் சொன்ன விஷயத்தைக் கேட்டதும்தான், தன் மகன் புரட்சி இயக்கத்தில் இருப்பது அந்தக் குடும்பத்துக்குத் தெரியுமாம்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வீட்டுக்கே வரவில்லை பிரபாகரன். அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்து அப்பா போய்ப் பார்த்தபோது, 'இனி உங்களுக்கோ, குடும்பத்துக்கோ நான் பயன்பட மாட்டேன். என்னை என்போக்கில் விட்டுவிடுங்கள்’ என்று தன் அப்பாவைத் திருப்பி அனுப்பினார் பிரபாகரன்.

குடும்பத்துக்கும் அவருக்குமான உறவு அறுந்து விட்டாலும் பொலிஸ், இராணுவத்தினரின் தொந்தரவு அதிகரித்த நிலையில், பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளையும் பார்வதியும் தமிழ்நாட்டிலேயே தங்கிவிட்டார்கள். அண்ணன் மனோகரன், அக்காள்கள் ஜெகதீஸ்வரி, விநோதினி ஆகியோர் குடும்பங்களும் வெளிநாடுகளுக்குப் போய்விட்டன.

அதன் பிறகு, சுமார் 25 ஆண்டுகள் கழித்து ஒரே ஒரு முறை மட்டும்தான் தன் தந்தையைப் பார்த்திருக்கிறார் பிரபாகரன். இந்திய - இலங்கை ஒப்பந்தம் உருவானபோது, கொழும்பில் இருந்து சென்னை வழியாக டெல்லி சென்ற பிரபாகரன், சென்னையில் தன் அப்பா வேலுப்பிள்ளையுடன் சில நிமிடங்கள் இருந்தார். அதோடு சரி!

ஆரம்ப காலத்தில் பிரபாகரனைப் போலவே சிவகுமார் என்பவரும் ராணுவத்தை எதிர்த்து சிறு இயக்கத்தைத் தனியாக நடத்தினார். பிரபாகரனுக்கு சிவகுமார்தான் முக்கிய வழி காட்டி என்கிறார்கள். 1974-ல் கொழும்பில் நான்காம் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது நிகழ்ந்த வன்முறையில் பல தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

அதற்குக் காரணமாக இருந்த பொலிஸ் அதிகாரி சந்திரசேகராவைக் கொலை செய்யத் திட்டமிட்ட சிவகுமாருக்கும் பொலிஸுக்கும் நேரடியாக மோதல் ஏற்பட, கடைசியில் சயனைட் குப்பியை விழுங்கி சிவகுமார் தற்கொலை செய்து கொண்டார். 'புலிகள் கழுத்தில் சயனைட் வைத்துக்கொள்ள வேண்டும்’ என்ற பிரபாகரனின் முடிவுக்குக் காரணம் அந்த வீரத் தியாகம்தான்.

தமிழ் மாணவர் பேரவை’தான் பிரபாகரனுக்கான ஆரம்பம். இயக்கத்தில் ரொம்பவும் வயது குறைந்தவர் (16 வயது!) என்பதால், எல்லோருமே 'தம்பி... தம்பி’ என்று கூப்பிட்டனர். அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. பிறகு, அவரே புலிகள் இயக்கம் தொடங்கி இளைஞர்களை நிறையச் சேர்த்தபோது அவர்கள், 'தம்பி என்று எப்படி அழைப்பது?’ என்று தயங்கி, 'தம்பியண்ணா’ என்று அழைத்தார்கள். இப்போது அனைவருக்கும் அவர் 'தலைவர்’!

கடந்த நவம்பர் மாதம் வரை புலிகள் இயக்கத்தில் சுமார் 17 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். அத்தனை இழப்புகளையும் தாண்டி அந்த இயக்கம் நிமிர்ந்து நிற்பதற்குக் காரணம், அவர்களின் கட்டுப்பாடு. சாதாரண வீரர் தொடங்கி தலைவர் வரை அனைவருக்கும் ஒரே நடைமுறை. முகாமில் ஒரே சமையல். 100 பேர் இருக்கும் ஒரு முகாமில் முதல் நாள் ஐந்து போராளிகள் சமைக்க வேண்டும். அடுத்த நாள் ஐந்து பேர் சமையல் என நீளும் இந்த வரிசையில் பிரபாகரனின் சமையலும் தொடர்கிறதாம். இறந்தவர்கள் அனைவரின் நினைவாக நவம்பர் 27-ம் தேதி 'மாவீரர் நாள்’ கொண்டாடப்படுகிறது. எந்தப் போராளிக்கும் தனியாக நினைவு தினம் கொண்டாடப்படுவது இல்லை.

தமிழ்நாட்டில் இருந்தபோதுதான் பிரபாகரனுக்குத் திருமணமானது. மனைவி பெயர் மதிவதனி. இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகப் பெரிய உண்ணாவிரதப் போராட்டத்தை மதி நடத்தியபோது, இருவருக்கும் காதல் ஏற்பட்டது. புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களே இவர்களின் திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது, அன்டன் பாலசிங்கம் மட்டும்தான் ஆதரவாக இருந்தார்.

'காதல் என்பது தமிழ் கலாசாரத்துக்கு எதிரானது அல்ல. வீரத்துக்கு இணையாகவே தமிழ் இலக்கியங்களில் காதல் பேசப்பட்டு இருக்கிறது’ என்று போராளிகளுக்கு விளக்கம் சொல்லி, பிரபாகரனின் திருமணத்துக்கு அனுமதி வாங்கித் தந்தாராம் பாலசிங்கம். திருப்போரூர் கோயிலில் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். தனது புலிப் படையில் இருந்து மரணம் அடைந்த சார்லஸ், துவாரகா, பாலசந்தர் ஆகியோர் பெயர்களையே தன் குழந்தைகளுக்கு வைத்திருக்கிறார் பிரபாகரன். மூத்த மகனுக்கு 17 வயது. மூன்றாவது குழந்தைக்கு 6 வயது.

பிரபாகரனின் மனம் கவர்ந்த வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். போர்த் தந்திரங்களில் பிரபாகரனின் வழிகாட்டிகள் கியூபாவின் சே குவேராவும் சீனத்து மாசேதுங்கும். விடுதலைப் போராட்டங்கள் பற்றிய புத்தகங்கள்தான் இவரது நூலகத்தில் இருக்கும். போர் பற்றிய பட கேசட்டுகள் மொத்தமும் வைத்திருக்கிறார் பிரபாகரன்.

அல்ஜீரியா விடுதலை வீரன் அலி பற்றிய படம் பிரபாகரனுக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்தப் படத்தில் அல்ஜீரியப் பெண் ஒருத்தி. தன் இடுப்பில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு இராணுவ முகாமுக்குள் விழுந்து வெடிக்கவைப்பாள். இதைத்தான் பிரபாகரனும் தனது போராட்டத்துக்குப் பயன்படுத்தினார்.

கைத்துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சர் இரண்டையும் இயக்குவதில் பிரபாகரன் கெட்டிக்காரர். எட்டு பாட்டில்களை வரிசையாக வைத்து, யார் வீழ்த்துகிறார்கள் என்று ஒரு போட்டி புலிகளின் முகாமில் நடந்தது. அதில் எட்டுப் பாட்டில்களையும் குறி தவறாமல் சுட்டுச் சிதறடித்திருக்கிறார் பிரபாகரன்.

பல ஆயுதங்களை புலிகளே சொந்தமாகத் தயாரிப்பதும் உண்டு. துப்பாக்கியில் செருகிச் சுட்டால் பறந்துபோய்த் தாக்கும் ரைஃபிள் கிரானைட்ஸ், பசிலன் - 5000 போன்றவை சில உதாரணங்கள்.
ஜானி கண்ணிவெடி பிரபாகரனின் ஒரிஜினல் தயாரிப்பு. இரும்பையே பயன்படுத்தாமல், மரத்தால் ஆனதாம் இந்த வெடி. மரக்கட்டையை வெட்டி, அதற்குள் வெடிமருந்து திணிக்கப்பட்டு இருக்கும். சாதாரணமாக ரோட்டில் கிடக்கும் அந்த வெடியில் கால் பட்டால் வெடிக்கும்.

தமிழ்ச்செல்வன், கருணா, சூசை மூவரும்தான் பிரபாகரனின் முக்கியத் தளபதிகள். ஆனையிறவு இராணுவ முகாமைத் தாக்கி, ஏராளமான ஆயுதங்களை எடுத்துவந்த கருணா, இப்போது புலிகளின் இராணுவப் பிரிவுப் பொறுப்பாளர். பிரபாகரன் மிக முக்கியமாக நினைக்கும் படைப் பிரிவான கடற்புலிகளை நிர்வகிக்கிறார் சூசை. சமீப காலமாக பிரபாகரனோடு தென்படுபவர் தமிழ்ச்செல்வன். நேரடிப் போர்களில் பல முறை ஈடுபட்ட தமிழ்ச்செல்வனுக்கு, ஒரு முறை முழங்காலில் குண்டு பாய்ந்து காயம். அதில் இருந்து அவரை அரசியல் பிரிவுத் தலைவராக்கித் தன் பக்கத்தில் வைத்திருக்கிறார் பிரபாகரன்.

இயக்கத்தவர்கள் திருமணம் செய்துகொள்வதுபற்றி விவாதம் வந்தபோது, 'திருமணம் செய்துகொள்ள விரும்புகிறவர்கள் ஒன்று கலப்புத் திருமணம் செய்ய வேண்டும் அல்லது விதவைகளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்’ என்று கட்டளையிட்டார் பிரபாகரன். காதல் திருமணங்களுக்கும் பச்சைக் கொடி. ஆனால், அவர்கள் இயக்கத்தில் சேர்ந்து ஆறு ஆண்டுகள் ஆன பிறகுதான் திருமணம் செய்துகொள்ள முடியும். சிவப்பு நிறச் சேலையை மணமகள் அணிந்திருப்பார். வெள்ளை வேட்டி-சட்டையில் இருப்பார் மணமகன். உறுதிமொழி எடுத்துக்கொண்டு தாலி கட்டிக்கொள்வார்கள். தாலியில் தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் சின்னங்கள் இருக்கும். சமீப காலமாக நடக்கும் திருமணங்களில் மணமகனுக்கு, மணமகள் சங்கிலி அணிவிக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

நிலத்தின் அடியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டில்தான் பிரபாகரன் இருக்கிறார். இது இரண்டு மூன்று அடுக்குகளைக்கொண்டது, நிலப்பரப்பில் வெடிகுண்டு விழுந்தாலும் உள்ளே பாதிப்பு அடையாத கான்க்ரீட் வீடு அது.

கழுத்தில் நஞ்சுக் குப்பியோடு அண்டர்கிரவுண்ட் வீட்டில் வாழும் பிரபாகரன், வெளியே வந்து ஜனநாயகக் காற்றைச் சுவாசிக்கப்போகும் நாள் எது?

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் பற்றிய ஒரு பார்வை.

உலகப் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பிரபாகரனிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்குப் பதில் சொன்னவர் அன்டன் பாலசிங்கம்தான். இயக்கம் தொடங்கிய காலத்திலேயே பிரபாகரனுக்கு இவர் அறிமுகம். புலித் தலைவருக்குப் பிடித்த அறிவுச் சிங்கம் இவர்.

கொழும்பில் இருக்கும் பிரிட்டிஷ் தூதரகத்தில் மொழி பெயர்ப்பாளராக வேலை பார்த்த பாலசிங்கம், 'மார்க்ஸிய மனோதத்துவம்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். வீரகேசரி பத்திரிகையில் துணை ஆசிரியராகவும் இருந்தவர். உலக விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றியும் ஆயுதங்கள் பற்றியும் ஆங்கிலப் புத்தகங்களை பிரபாகரனுக்கு மொழிபெயர்த்துச் சொல்லி, அதன் மூலம் அவரின் நெருக்கத்தைப் பெற்றவர். போராளிகள் படிப்பதற்காக சேகுவேரா, மாவோ மற்றும் பலர் எழுதிய கெரில்லா யுத்தம் பற்றிய கட்டுரைகளை மொழி பெயர்த்துப் புத்தகங்களாகத் தந்தவர் பாலசிங்கம்.

அனைத்து நாடுகளோடும் புலிகள் தங்கள் அமைப்பின் தொடர்பைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரபாகரன் முடிவெடுத்தபோது, பாலசிங்கத்தை லண்டனுக்கு அனுப்பி வைத்தார். ஈழத் தமிழர்களிடம் இருந்து பெருமளவு பணமும், பல நாட்டு அரசுகளின் ஆதரவும் கிடைக்க பாலசிங்கம் காரணமாக இருந்தார்.

லண்டனில் இருந்தபோது சிறுநீரகக் கோளாறு காரணமாக பாலசிங்கத்தின் மனைவி இறந்துபோனார். அதன் பிறகு அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அடேல் என்பவரை பாலசிங்கம் திருமணம் செய்துகொண்டார். தொழிலால் இவர் நர்ஸ், புலிகளின் பெண்கள் பிரிவில் உறுப்பினர்.

கார்ல் மார்க்ஸ் - லெனினின் தத்துவங்களின்பால் ஆழ்ந்த ஈடுபாடும், ஆழமான படிப்பும்கொண்ட பாலசிங்கத்துடன் சேர்ந்துதான் கொள்கைபூர்வமான முடிவுகளை எப்போதும் எடுத்து வந்திருக்கிறார் பிரபாகரன். மூன்றாவது நாடு ஒன்றின் முன்னிலையில் பேசினால்தான் தீர்வு வரும் என்று சொல்லி, அதற்கான வேலையில் இறங்க பாலசிங்கத்துக்கு பிரபாகரன் உத்தரவிட்டார். இந்த நிலையில், நார்வே நாட்டோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவந்தார் பாலசிங்கம். தாய்லாந்தில் நடக்கப்போகும் பேச்சுவார்த்தையிலும் பிரபாகரன் சார்பாகப் பேசப்போவது பாலசிங்கம்தான்.

முகத்தில் சாந்தமும் வார்த்தைகளில் கம்பீரமும் காட்டி வெளிப்படையாகப் பேசிவரும் பாலசிங்கம், இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில்தான் நாட்களை நகர்த்திவருகிறார்.

21-04-2002 ம் ஆண்டு வெளிவந்த ஆனந்தவிகடன் கட்டுரை மீள்பிரசுரமாகின்றது.





Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us