ஈழம்

ஈழம்

வியாழன், 30 ஜனவரி, 2014

கப்டன் அற்புதனின் வீர வரலாற்று நினைவுகள்.

பல மாவீரர்களை தாயக விடுதலைக்காக தந்த பருத்தித்துறை மண்ணில் இருந்து 1991 இல் தாயகப் போருக்காக தன்னையும் இயக்கத்தில் இணைத்துக் கொண்டான் ஜெயரூபன்.மூன்று அண்ணன்களுக்கு தம்பியாகவும் தங்கைக்கு அண்ணாவாகவும் ஜெயராசா தம்பதிகளுக்கு மகனாக10.08.1975 அன்று பிறந்தான் ஜெயரூபன்.


போராளியாக இணைந்தவனை படையணியின் சரத்பாபு 02 பயிற்சி முகாம் உரமூட்டி வளர்த்தது. ஜெயரூபன் அற்புதனாகி வெளிவந்தான். பயிற்சியை முடித்து வெளி வந்தவனின் முதல் களம் ஆகாய.கடல் .வெளி சமர் வரவேற்றது. ஆவன் வீரத்தை வெளிப்படுத்த அக்களமே வழிவகுத்தது . மீண்டும் தளம் திரும்பியவனை படையணி தளபதியாக இருந்த பிரிகேடியர் சொர்ணம் அவர்களால் விமான எதிர்ப்பு அணிக்குத் தெரிவு செய்யப்பட்டான்.

சிறப்பாகத் தனது பயிற்சியைச் செய்து கொண்டிருந்தவனை  மீண்டும் களம் அழைத்தது. காட்டைக்காடு மினி முகாம் தகர்ப்பு. இம்ரான் பாண்டியன் படையணி பெயர் சூட்டப்பட்ட தாக்குதல் பலவேய 02 சமர்களில் பங்கு கொண்டு தனது வீரத்தை வெளிக்காட்டினான். மீண்டும் விமான எதிர்ப்பு அணியில் பணியாற்றினான்.

இவனின் கடமை உணர்வை அறிந்த தளபதி சொர்ணம் அவர்கள் தலைவருக்கான வெளி பாதுகாப்புப் பணிக்குத் தெரிவு செய்தார். அங்கு தனது திறமையையும் கடமை உணர்வையும் சிறப்பாகவே வெளிக்கட்டினான். இதனால் வெளி பாதுகாப்பு அணியில் சில பகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான்.

வெளிப்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட பொழுது மக்களின் மதிப்பையும் பெற்ற சிறந்த போராளியாக விளங்கினான்.

1995 ஆம் ஆண்டு இறுதியில் விசேட இராணுவப் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்பட்டான். கடுமையான பயிற்சிகளையெல்லாம் மிகவும் இலகுவாகச் செய்து முடிப்பான். இதனால் ஆசிரியர்களால் முன்னுதாரணமாக எப்போதுமே காட்டப்பட்டு பாராட்டுக்களையும் பெற்றவன். இவன் இருக்குமிடம் என்றும் கலகலப்புக்கு குறைவே இருக்காது.

அற்புதன் தனது தலை முடியில் மிகவும் கவனம் கூடியவன். பெண்கள் தோற்றுப் போகும் அளவுக்கு நீண்ட நேரம் கண்ணாடி முன் நின்று தலையை இழுப்பான். அவனது அழகின் பெருமையே அவனது தலைமுடிதான். எப்போதும் தலைமுடியை அழகாகவே வைத்திருப்பான்.

யாழ் இடப்பெயர்வுக்குப் பின் வன்னி மண்ணில் சில காலம் பணியாற்றியவன். சண்டைக்கு போகப்போகிறேன் என அடம்பிடித்து ஆனையிறவு , பரந்தன் ஊடறுப்புச் சமரில் 7பேர் கொண்ட அணிக்கு பொறுப்பாளராக சென்றான்.

உப்பளப் முகாம் மீட்புக்கான சமரில் சமராடிய அற்புதன் 09.01.1997 அன்று உப்பளக் காற்றுடன் சங்கமமாகி மாவீரனாகினான். எங்களின் தோழன் கப்டன் அற்புதனை நாங்கள் இழந்து போனோம் உப்பளத்தில்.
கரும்புலியாகப் போக விரும்பி தலைவருக்குக் கடிதம் அனுப்பியிருந்ததான். ஆனால் அவன் விரும்பிய கரும்புலிக்கான பதில் வர முன் அவன் மாவீரன் ஆகிவிட்டான். எங்கள் தோழன் அற்புதன்.

எங்கள் தோழன் எங்களைப் பிரிந்து பல ஆண்டுகள் இன்றோடு நிறைகிறது. அவன் விட்டுச் சென்ற கனவுகள் தொடர்ந்து கொண்டேயிருக்க அவன் நினைவுகளை நாங்கள் சுமந்து கொண்டு செல்கிறோம்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் களமாடி வீழ்ந்த கப்டன் அற்புதன் அண்ணாவிற்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும்  வரை உங்களை நிச்சயம் தொடர்வோம். 

|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||

- நினைவுப்பகிர்வு – எழிலகன் (09.01.2014)

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us