ஈழம்

ஈழம்

வெள்ளி, 18 மார்ச், 2011

ஈழத்து மண்ணில் அன்றே பூத்தவள் அவள்: மாலதி


எம் விடுதலை போருக்கு
நாங்கள் கொடுத்த கொடை -
எம் மண்ணின் வீரம் வரலாற்றில் நிலைக்க விதைத்த
முதல் தாய்விதை; மாலதி!



பெண்ணின் வீரம் இதுவென்று
சமரில் காட்டிய முதல் பெண்புலி; விடுதலைக்கு
கனவு சுமந்தோர் மத்தியில் – களத்தில் இறங்கி
உயிரை கசக்கியெறிந்த போராளி; மாலதி!

உயிர்போகும் பயத்தை கொன்று
தன் ஆயுதம் காக்க அதிகம் பதைத்தவள்;
மானம் காக்க உயிர்விட்ட தமிழச்சி போல்
மண்ணின் வீரம் சொட்ட உயிர் குடித்தவள்; மாலதி!

சைனைட் குப்பி கீழே சாயும் முன்
உடல் சாய்ந்து மண்ணை முத்தமிட்டவள்;
வல்லுறவு கொண்ட மனிதமிருகத்திடம்
தன் பெண்ணுறவை காக்க சபதமேற்றவள்; மாலதி!

ஆண்பெண் சமநிலை மலர இருபத்தியிரண்டு
ஆண்டுகளுக்கு முன்னரே முழக்கமிட்டவள்;
ஈழக் கனவை இருபாலருக்கும் ஒரு கனவாக்கி
அதற்குத் தன் உயிரையும் உரமாயிட்டவள்; மாலதி!

பெண்கற்பை சூறையாடும் கயவர்களை யொழிக்க
நடு சாமம் நடுத் தெருவில் காவல் காத்தவள்;
எதிரியை சுட்டுப் பொசுக்க ஏந்திய துப்பாக்கியில்
தன் கனவையும் லட்சியத்தையும் ரவையோடு சேர்த்து சுட்டவள்; மாலதி!

கலகலப்பாய் பூக்கும் பூவில் ஒரு பூவாய்
பூத்தவள்; அண்ணன் தங்கை உறவில் – உள்ளத்தை
உயிர்நார் கொண்டு கட்டியவள்; உலகவழக்கு
எல்லாம் மறந்து தன் மனவழக்கின் தீர்ப்பை ஏற்பவள்: மாலதி!

நாட்டுக்கொரு போர் நாளும் நடப்பதை
ஒற்றை நபராய் தடுக்க நினைத்தவள்;
கடைசி மண் காற்றில் பறக்கும் வரை
ஈழத்தின் உயிர்பூவாய் பூக்க உதிர்ந்தவள்; மாலதி!!

வித்யாசாகர்.

மாலதி படையணியின் காணொளி.



Image Hosted by ImageShack.us

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us