ஈழம்

ஈழம்

புதன், 3 அக்டோபர், 2012

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: [பாகம் 11]

இஸ்ரேலியர்கள் என்றால் யார்? அந்த இனக் குழுமத்திற்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? ஏன் அவர்கள் யூதர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்? அவர்களது வரலாறு என்ன?


இஸ்ரேலியர்கள் எவ்வாறு ஒரு விடுதலை பெற்றார்கள் என்று பார்ப்பதானால் முதலில் இஸ்ரேலியர்களுடைய பூர்வீகம் பற்றி நாம் நிச்சயம் அறிந்து கொள்ளவேண்டும்.

இஸ்ரவேல் என்கின்ற இனத்தின் வரலாறு ஆபிரகாம் என்கின்ற மனிதனுடைய வாழ்க்கையில்தான் ஆரம்பமானது என்று கடந்த வாரம் பார்த்திருந்தோம்.

இஸ்ரேலியர்களுடைய மாத்திரமல்ல கிறிஸ்தவர்கள், மற்றும் இஸ்லாமியர்களுடைய உருவாக்கமும் கூட இந்த ஆபிரகாம் என்ற தனி மனிதனுடைய வாழ்க்கையில்தான் ஆரம்பமாகின்றது.

இந்த ஆபிரகாம் ஒரு கற்பனைக் கதாபாத்திரமோ அல்லது மதநம்பிக்கையின் ஒரு வெளிப்பாடு அல்ல. ஆபிரகாம் என்ற மனிதன் உண்மையாகவே வாழ்ந்ததற்கான சான்றுகளை உலக சரித்திரவியலாளர்களும், புவியிலாளர்களும் ஏற்றுக்கொள்கின்றார்கள். இன்றைக்கு சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஆபிரகாமின் கல்லறை இன்றைக்கும் யூதர்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

சரி இனி ஆபிரகாமின் கதைக்கு வருவோம்.

இன்றைய ஈராக்கின் ஒரு பகுதியில் வசித்துவந்த ஆபிரகாம் என்ற மனிதருடன் பேசிய கடவுள் நெடுந்தொலைவில் உள்ள காணான் தேசத்தை அவரது சந்ததிக்குத் தருவதாகக் கூறியதாக கிறிஸ்தவர்களின் வேதாகமம், இஸ்லாமியர்களின் திருக்குரான், யூதர்களின் தோரா போன்ற மத நூல்கள் கூறுகின்றன. கடவுளின் கட்டளைப்படி தனது தேசம், சொந்த பந்தங்களை விட்டுப் புறப்பட்ட ஆபிரகாம், பல நூறு மைல் தொலைவு பிரயாணம் செய்து காணான் தேசம் வந்து சேர்ந்தார்.

தற்போதைய இஸ்ரேல் தேசம்தான் அன்றைய அந்தக் காணான் தேசம்.

(படம்:ஈசாக்கின் கல்லறை)

ஆபிரகாமின் சந்ததியை பூமியில் உள்ள மணல்களைப்போல் பெருக்கி ஆசீர்வதிப்பதாக கடவுள் ஆபிரகாமிடம் கூறிவிட்டார். ஆனால் ஆபிரகாமுக்கோ பிள்ளைகள் கிடையாது. அவருக்கு அந்த நேத்தில் 85 வயது. மனைவி சாராளும் ஒரு 75 வயது மூதாட்டி. பிள்ளை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பமில்லை. இனி எங்கிருந்து அவருக்கு சந்ததி உருவாகி, அந்தச் சந்ததி விருத்தியாகி, ஆசீர்வதிக்கப்படுவது?

சுமார் பதினைந்து வருடங்கள் கழித்து, அதாவது ஆபிரகாமுக்கு 100 வயதும் மனைவி சாராளுக்கு 90 வயதும் ஆக இருந்த போது, கடவுள் கொடுத்த வாக்கின்படி ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் ஒரு குழந்தை பிறந்தது.

அந்தப் பிள்ளைக்குப் பெயர் ஈசாக்.

ஈசாக்கும் தகப்பனைப் போலவே மிகுந்த கடவுள் பக்தி மிக்கவன். கடவுள் ஆபிரகாமுக்கு வழங்கிய வாக்குறுதியை ஈசாக்குக்கும் வழங்கினார்.

'இந்தத் தேசத்தில் வாசம்பண்ணு. நான் உன்னோடே கூட இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன். நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்த தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன். நான் உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போல பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்த தேசங்கள் யாவையும் தருவேன். உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்."

ஈசாக்குக்கு இரண்டு மகன்கள்.

மூத்தவன் பெயர் ஏசா. இரண்டாமவனின் பெயர் யாக்கோபு (ஆங்கிலத்தில் ஜேக்கப்)

இந்த யாக்கோப்பு ஒரு ஏமாற்றுக்காரன். தகப்பனையும் தனது மூத்த சகோதரனையும் ஏமாற்றி தனது வம்ச ஆசீர்வாதத்தை தகப்பனிடமிருந்து பெற்றுவிடுகின்றார். சகோதரரை ஏமாற்றி வஞ்சித்துவிட்டு வீட்டைவிட்டே ஓடிவிடுகின்றான்.

பல இடங்கள் சுற்றித் திரிந்துவிட்டு, ஒரு சந்தர்ப்பத்தில் மனமாற்றம் அடைந்து மீண்டும் காணான் தேசம் திரும்புகின்றான்.

கடவுள் ஏற்கனவே இவனது பாட்டனான ஆபிரகாமுக்கும், தகப்பனாகிய ஈசாக்குக்கும் வாக்குத்தத்தம் கொடுத்தது போலவே, இந்த யாக்கோபுக்கும் வாக்குத்தத்தம் கொடுக்கிறார்.

'நான் உனது தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்.  நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். உன் சந்ததி பூமியின் தூளைப் போலிருக்கும். நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய். உனக்குள்ளும், உனது சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்."

இவ்வாறு யாக்கோபுக்கு வாக்குத்தத்தம் கொடுத்த கடவுள் யாக்கோபுக்கு ஒரு புதிய பெயரைச் சூட்டினார்.

யாக்கோபு என்ற பெயருக்கு ஏமாற்றுக்காரன் என்று அர்த்தமாகி விட்டிருந்த நிலையில், அவனுக்கு ஒரு புதிய பெயரை கடவுள் வைத்தார்.

அவனது புதிய பெயர் இஸ்ரவேல்.

யாக்கோபாக இருந்து பின்னர் இஸ்ரேலாக பெயர் மாற்றப்பட்ட அந்த மனிதனின் வம்சத்தோன்றல்கள்தான் இன்றைய இந்த இஸ்ரேலியர்கள்.

அந்தக் காலத்தில் காணான் தேசமாக இருந்த தேசத்தில் இந்த இஸ்ரேலிய வம்சத்தார் சென்று குடியேறியதைத் தொடர்ந்து அந்த தேசம் இஸ்ரேல் தேசமாக மாறியது.

இதுதான் இஸ்ரேல் என்ற பெயர் உருவாக்கத்தின் கதை.

கதை என்று நினைப்பவர்களுக்கு இது கதை. உண்மை என்று நினைப்பவர்களுக்கு இது உண்மை.

ஆனால் இதனை வாழ்கை என்று நினைத்து வாழ்ந்துவரும் இஸ்ரேலியர்களுக்கு இது ஒரு விடுதலை.

மேலே கூறப்பட்ட கதையுடன் ஒன்றியதாக மற்றொரு விடயத்தையும் நாம் இச்சந்தர்பத்தில் பார்த்துவிடுவது நல்லது.

அதாவது இஸ்ரேலிய மக்கள் என்று அழைக்கப்படும் சமூகக் கூட்டத்திற்கும் யூதர்கள் என்கின்ற சமூகக் கூட்டத்திற்கும் இடையில் ஒரு சிறிய வித்தியாசம் இருக்கின்றது. இஸ்ரேலியர்கள் என்ற பெயர் அடையாளத்தில் அழைக்கப்படுகின்ற அனைவருமே யூதர்கள் கிடையாது. அதில் சிறிய வேறுபாடு இருக்கத்தான் செய்கின்றது.

இந்த வேறுபாடும் நாம் மேலே பார்த்த கதையில்தான் வருகின்றது.

அத்தோடு இந்தக் கதையில்தான் இஸ்லாமியர்களின் உருவாக்கமும் வருகின்றது.

இந்த இரண்டு விடயங்கள் பற்றியும் அடுத்த வாரம் சுருக்கமாகப் பார்த்துவிட்டு, இஸ்ரேலியர்களுடைய சரித்திரம், அந்தச் சரித்திரத்தின் இடைநடுவே அவர்கள் பெற்ற விடுதலை, அந்த விடுதலையை அவர்கள் தொலைத்த விதம், அதன் பின்னரான அவர்களது அகதி வாழ்க்கை, நீண்ட அகதி வாழ்க்கையின் பின்னர் அவர்கள் பெற்ற சுதந்திரம் என்பன பற்றி விரிவாக ஆராய்வோம்.

எமது இந்த ஆழமான பார்வைகளின் பெழுது, ஒரு விடுதலை வேண்டிப் போராடுகின்ற ஈழத் தமிழினம் எப்படியான பாடங்களை இஸ்ரேலிய விடுதலைப் போராட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள முடியும் என்றும் பார்ப்போம்.



அடுத்த அத்தியாயத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்…


நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch
Image Hosted by ImageShack.us


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us