ஈழம்

ஈழம்

செவ்வாய், 15 ஜனவரி, 2013

ஆழியவளையிலிருந்து எழுந்த கடற்புலி மேஜர் கலாநிதி ஒரு போராளியின் புனித பயணம்.

இமயம் முதல் குமரி வரையும், கங்கை தொடக்கம் கடாரம் வரையும் எட்டுத் திக்குகளிலும் வெற்றிக்கொடியைப் பரப்பி விட்டவன் தமிழன். ஆட்சியுரிமையோடு ஆசியாவில் வாழ்ந்து இந்துமாகடலின் ஆளுகையை தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்து அதற்கு சொந்தம் கொண்டாடியவன் எமது முப்பாட்டன் சோழன்.
இதனால் உலகில் முதல் கப்பல் படையை நிறுவி கடலில் படை நடத்தியவனும் தமிழன் என்பது உண்மை வரலாறாகும். இவ்வாறு பெருமைகொண்ட தமிழினம் சொந்த நாடின்றி, சொந்த கடல்வளமின்றி, இருப்புக்கு இடமின்றி, நாதியற்று, நாடு நாடாக அலையும் நிலையில், தன்மானமிழந்து பணலாபம் கொண்டு வக்கற்ற வாழ்வில், திக்கற்ற இலக்கில் இன அடையாளத்தை தொலைத்து வாழும் நிலையில் சொந்த நாட்டில் எழுந்த உரிமை உணர்வும், விடுதலை தாகமும், எந்த இனத்திலும், எந்த நாட்டிலும், ஒரு விடுதலை இயக்கம் வைத்திராத படைகளை அமைத்து, வாழுகின்ற தமிழரின் வீரம், மானம் ஒருங்கே சேர எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களினால் உருவாக்கிய கடல் புலிகள் படைத்த போர்க்காவியம் தமிழரின் பரம்பரையையும், தாய்மண்ணின், பற்றையும் எமக்கு மீண்டும் நினைவூட்டியது.

நாம் தமிழர் என்ற உணர்வும், எம்மை நாம் முற்றாக அறிந்து கொள்ளும் நிலையும், எமது இனத்தின் தனித்துவம், அடையாளத்தை நிலை நிறுத்திக்கொள்ளும் உறுதியும் தமிழராகிய எமக்கு இருக்க வேண்டும்.

தலைமை தாங்கி வழிநடத்துபவர் தப்பிச் செல்வதைவிட தானே முன்னின்று படை நடத்திய பெருமையும், தம்மை அர்ப்பணித்து தமிழ் மானம் காத்த வல்லமையும் எமது விடுதலைப் போராட்டத்தில் நடந்தேறியுள்ளது.

கடல் புலிகளின் காவியத் தலைவி லெப்.கேணல் நளாயினி தொடுத்த கடல் போர், தகர்ந்த சிங்களக் கடற்கலங்கள், காட்டிய வழி எண்ணற்ற கடற்புலிப் பெண் போராளிகளை விடுதலை இயக்கத்திற்குப் பெற்றுக்கொடுத்தது.

காலத்தால் அழியாத போர்க்காவியம் ஒன்று ஈழத்தில் எழுதப்பட்டுள்ளது. எமது இளையோர்கள் ஏந்திய போர்க்கருவி, இடைவிடாது தொடுத்த போர்கள், காட்டிய வீரம், மூட்டிய விடுதலைத் தீயில் அவர்களின் தற்கொடை எரிந்து எதிரியைத் திணறடித்த தீரம், எமது தலைவனின் உருவாக்கத்தில் எழுந்த முப்படைகள் தமிழனின் புறநானூற்றைப் புரட்டிப் போட்டதையும், புதிய வரலாறு தமிழனின் வரலாற்றில் பதிவு செய்ததையும் பார்த்திருக்கின்றோம்.

காலத்தின் தேவையறிந்து எமது தலைவன் உருவாக்கிய முப்படைகளில் ஒன்றான கடல் புலிகள் அதிலும் தமிழ்ப் பெண்களின் வீரம் என்பது எண்ணிப் பார்க்க முடியாத தற்கொடையையும், தம்மைஇழந்து தமிழ் மானம் காத்த பெருமையையும் எழுதி முடிப்பதற்கு எவ்வளவு காலம் எமக்குச் செல்லும் என்பதைக் கூறமுடியாத நிலையில் தமிழ்ப் பெண்களின் வீரம் ஈழத்தில் எழுந்த விடுதலைப்போரில் ஒவ்வொரு படையணியிலும் அவர்கள் காட்டிய துணிச்சல், சாதனைகள் விவரிக்க முடியாதளவு விரிந்து கிடக்கின்றன.

தரையில் சாதித்த எமது தமிழ்ப் பெண்கள் கடலில் சாதிக்கப் புறப்பட்ட போது பெண் போராளிகளிளிருந்து தேர்ந்தெடுக்கபட்ட சில போராளிகளில் ஒருவராக களமிறங்கியவர் மேஜர். கலாநிதி ஆகும். லெப். கேணல் நளாயினி தலைமையில் கடல் புலிகளின் பெண்கள் அணி உருவான போது முதல் பாசறையில் பயிற்சி பெற்று வெளியேறியவர், பயிற்சியில் காட்டிய தீரம், முன்னணிப் போராளிகளில் ஒருவராக கனரகப் ஆயுதப் பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டு 50 கலிவர் சுடுகலனின் சுடுனராக வெளியேறினார்.

வடமராட்சி கிழக்கு மண்ணில் ஆழியவளை ஊர் மிகவும் பிரபல்யம் பெற்றதாகும். இவ்வூரில் உணர்வுமிக்க விடுதலைப் பற்றுக்கொண்ட குடும்பத்திலிருந்து தமிழினத்தின் விடுதலைக்காகப் புறப்பட்ட நந்தினி என்னும் இயற் பெயர் கொண்ட மேஜர் கலாநிதி, இராசேந்திரம் தம்பதிகளின் மூன்றாவது பெண் பிள்ளையாகும்.

ஐந்து சகோதரிகளும், ஒரு சகோதரனையும் கொண்ட குடும்பத்தில் விடுதலைக்காக தமது பங்கைச் செலுத்த விடுதலைப் போராளியாக எழுந்த இவருடைய குடும்பம் விடுதலைக்காக போராளிகள் புறப்பட்ட காலத்திலிருந்து ஆழியவளை ஊரில் ஆதரவு வழங்கிய குடும்பங்களில் ஒன்றாகும்.

பொங்குகின்ற தமிழுணர்வு மங்காது, மறையாது காத்துநின்ற மாவீரர்கள் வாழ்ந்த, வாழ்கின்ற வடமராட்சி கிழக்கு மண்ணில் என்றும், எப்போதும் விடுதலை உணர்வு வீழ்த்து விடவில்லை. இந்து மாகடலின் மடியில் படுத்துக் கிடக்கின்ற வங்காள விரிகுடாவில் ஆர்ப்பரித்து எழுகின்ற அலைகளின் தாலாட்டில் உறங்கியும், உறங்காமலும் விழித்து சொந்த மண்ணில் உரிமையுடன் வாழ எண்ணும் மக்களின் மத்தியில் பற்றோடு எழுந்த நூற்றுக் கணக்கான விடுதலை வீரர்களின் ஆன்மா உறங்காமல் விடுதலையை நோக்கி விழித்துக்கொண்டிருக்கின்றது.

எங்களுக்கின்றோர் நாடு இங்குதான் அமைந்திருக்கின்றது. காலத்தால் ஆழியதா வரலாற்றுப் பெருமையைக் கொண்ட எமது தமிழினம், வரலாறு கூறுகின்ற வாழ்விடமாக எமது மண் எமக்காக இருக்கின்றதை அனைத்துலகம் அங்கீகரிக்க வேண்டும். விடுதலை பெற்றவர்களாக தலை நிமிர்ந்து எமது மக்கள் சொந்த நாட்டில் வாழும் உரிமையை வழங்க வேண்டும். ஏதிலிகளாக புலம் பெயர்ந்து வாழ்கின்ற எமது மக்கள் சொந்த நாடு திரும்பி இன இருப்புக்கான அதிகரிப்பை ஏற்படுத்த வேண்டும். எமது இனம் பலமாக வாழ்வதற்கு இதுவும் தேவையாகும். அதற்கான அனைத்து உதவிகளையும் ஐக்கிய நாடுகள் மன்றம் செய்தாக வேண்டும். என்பது விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு தேசிய இனத்தின் ஒன்று பட்ட குரலின் வெளிப்பாடாகும்.

ஒரு போராளியின் புனிதப்பயணம் என்பது கல்லும், முள்ளும் நிறைந்த பாதையில் பயணித்து சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கிக் கொண்டு சொந்த இன மக்களின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணிக்கும் உயரிய தற்கொடையில் முடிவடைகின்றது.

இந்தப் பயணத்தில் இணைந்து கொண்ட மேஜர். கலாநிதி தன்னை வழிநடத்திய கடல் புலிகளின் பெண்கள் அணியின் தளபதி நளாயினின் பாசத்திற்குரிய போராளிகளில் ஒருவராகி கடல் சண்டைகளில் தனது சாமர்த்தியத்தை வெளிப்படுத்தினாள். தேசியத் தலைவர் மீது கொண்டபற்றும், விடுதலையில் கொண்ட விருப்பமும் தளபதி நளாயினி அவர்களை உயரிய தற்கொடைக்கு தன்னை அர்பணித்து கடல் கரும்புலியாகி சிங்களப் படைக்கடல்கலத்தை மன்னார் கடற்பரப்பில் தகர்த்தெறிந்து சாதிக்க வைத்தது. தளபதியாக, வழிகாட்டியாக லெப். கேணல் நளாயினி அவர்களின் பாதம் பதிந்த பாதையில் மேஜர். கலாநிதியின் பாதமும் பதிந்து சாதிக்கத் தொடங்கியது.

யாழ் நோக்கிய சிங்களப்படையினரின் ஆனையிறவில் இருந்து "யாழ் தேவி" நகர்வுத் தாக்குதலின் எதிர்ச்சமரில் கனரக ஆயுதப் பிரிவில் 50 கலிபர் உடன் களமாடி விழுப்புண் அடைந்திருந்தார். அதற்குப் பின்பு "தவளைப்பாய்ச்சல்" சிங்களப் படைத்தளத் தாக்குதலிலும் 50 கலிபர் உடன் களமிறங்கி வரலாற்றுப் பதிவையும் பெற்றுக்கொண்டார்.

விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படைநகர்வுகள், சிங்களப் படைத்தள மீதான தாக்குதல்களிலும், எதிர்ச்சமர்களிலும் மேஜர் கலாநிதியின் வீரம் வெளிப்படுத்தப்பட்டது. கடல் புலிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டபோதும் கனரக ஆயுதங்களைக் கையாளுவதில் தேர்ச்சி பெற்றவராக இருந்ததனால் தரைச்சமர்களுக்கும், முகாம், தளத்தாக்குதல்களுக்கும் மேஜர் கலாநிதியின் அணியினர் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

1976 ம் ஆண்டு முதலாவது மாதம் ஏழாம் நாள் தாய் மண்ணில் பிறந்த நந்தினி ஆரம்ப கல்வியை தனது ஊரிலும் க.பொ.த.சாதரணக் கல்வியை நாகர்கோவில் மாவித்தியாலயத்திலும் பயின்றார். இக்காலப் பகுதியில் விடுதலைப் போராட்ட எழுச்சியும், வளர்ச்சியும் எண்ணற்ற இளையோர்களை தாய் மண்ணின் விடுதலைக்காக போராட்டத்தில் இணைவதற்குத் தூண்டியது. இதற்கு விதிவிலக்கற்றவளாக 1992 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தன்னை ஓர் போராளியாக வரலாற்றில் பதிவு செய்தாள். இக்காலப்பகுதியில் இவருடைய குடும்பம் நாகர்கோவில் ஊருக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

கொக்குளாய் தொடக்கம் பருத்தித்துறைமுனை வரை கிழக்குக் கடற்கரையில் பரவிக்கிடக்கின்ற பழந்தமிழர் மண் என்றும் எமது சொந்த மண்ணாக இருக்க வேண்டும் என்ற உறுதி அனைத்து ஊர் மக்களிடமும் நிறைந்து காணப்பட்டன. முல்லைத்தீவு மண்ணைத் தொட்டு நிற்கின்ற யாழ் மண்ணின் கிழக்கு ஊர்களில் வாழ்கின்ற மக்கள் விடுதலைக்காக கொடுத்த விலை அதிகமாகும். இந்த வரிசையில் ஆயிரக்கணக்கான மாவீரர்களை மண்ணின் விடுதலைக்காக ஈந்த ஊர்கள் என்றும் வரலாற்றில் அழியாத பதிவைக் கொண்டிருக்கின்றது.

கொக்குத்தொடுவாய், நாயாறு, செம்மலை, அலம்பில், முல்லைத்தீவு, வட்டுவாகல், முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை, புதுமாத்தளன், சாலை, சுண்டிக்குளம், கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, ஆழியவளை, உடுத்துறை, வத்திராயன், மருதங்கேணி, தாளையடி, செம்பியன்பற்று, மாமுனை, நாகர்கோவில், அம்பன், குடத்தனை, மணற்காடு ஆகிய ஊர்கள் சொல்லும் கதைகள் விடுதலைப்போரில் மக்களின் பணியும், அர்ப்பணிப்புக்களும் அளவிட முடியாத நிலையில் போராளிகளின் புனிதப் பயணமும் விடுதலையை நோக்கி துன்பங்களையும், துயரங்களையும், இடம்பெயர்வுகளையும் சுமந்த மக்களை அணைத்துக் கொண்டு தொடர்ந்தன.

எப்போதும் விடுதலையை தோள்மீது சுமந்த மக்கள் விடுதலைப் போராளிகளுக்கு தோள்கொடுத்து கடலில் படை நடத்துவதற்கும் சிங்களப் படையை எமது கடலிலிருந்து விரட்டியடிப்பதற்கும் கடலில் காவியம் படைப்பதற்கும் துணை போயினர்.

மண்பற்றும், விடுதலைப் பற்றும், மொழிப்பற்றும் கொண்ட மக்கள் இடம் பெயர்ந்த போதும் கடற்கரையெங்கும் கால் பதித்து மீண்டும் விடுதலை பெற்றவர்களாக சொந்த மண் திரும்புவோம் என்ற நம்பிக்கையில் காத்திருந்தனர்.

1991 ம் ஆண்டு ஆகாய, கடல் வெளிச் சமரும், வெற்றிலைக்கேணி சிங்களப் படைத் தரையிறக்கமும் தேசியத் தலைவரின் சிந்தனையில் கடலில் எமது பலம், எதிரியைத்தாக்கும் திறன், எமது தாய் நாட்டின் விடுதலையில் தரைப் படையணிகளின் வளர்ச்சியின் மறுபுறத்தில் கடலின் ஆளுகையில் கடல்புலிகளின் வளர்ச்சியும், பலமும் கடலில் சிங்களக் கடற்படையின் பிரசன்னம், பலம் என்பவற்றை தகர்த்தெறியமுடியும் என்ற நம்பிக்கையில் தளபதி சூசை அவர்களின் தலைமையில் ஒழுங்கு படுத்தப்பட்டது.

விடுதலை இயக்கத்தின் வளர்ச்சியில் ஒவ்வொருபடி முன்னேற்றத்தில் காணப்பட்ட கடல்புலிகள் படைத்த சாதனைகள் எண்ணிலடங்காதது. சிங்களக் கடல் படையின் தரையிறக்க முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. அது மட்டுமல்லாது கடலிலிருந்து எமக்குத் தேவையான போர்க்கருவி தளபாடங்கள் இறக்கப்படுவதற்கும், ஏனைய வசதிகளை எமது விடுதலைப் போராளிகள் பெற்றுக்கொள்வதற்கும் கடல் புலிகளின் போரிடும் திறனும், கடற் கரும்புலிகளின் தற்கொடையும் காரணமாக அமைந்தன.

இளநிலைத் தளபதியாக களத்தில் மிளிர்ந்த மேஜர் கலாநிதி விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் நடத்தப்படுகின்ற பெரும் தாக்குதல்களில் தனது அணியுடன் பங்குபற்றுவதும், கடல் புலிகளின் பெண்கள் அணியை பலமுள்ளதாக மாற்றுவதற்கான போராளிகளில் முன்னிலைப் படுத்தப்பட்டவளாகவும் விளங்கினாள்.

சிறப்புப் பயிற்சினைப் பெற்றுக்கொண்ட மேஜர் .கலாநிதி கடல் புலிகளின் மகளிர் அணியின் 4ம் ,5ம் ,9ம் பயிற்சிப் பாசறையின் பயிற்றுனர்களில் ஒருவராக திகழ்ந்து நூற்றுக்கணக்கான போராளிகளை உருவாக்குவதற்கு காரணமாக விருந்தாள்.

அதே வேளையில் கடற்சண்டைப்பயிற்சியையும் பெற்றுக்கொண்டு கடற் சண்டைகளிலும் தன்னை ஈடுபடுத்தினாள். வடமராட்சி கிழக்கு மண்ணின் வீரம் செறிந்த பெண்போரளிகளில் ஒருவரான மேஜர் கலாநிதி அவர்களின் சிந்தனை, செயல்பாடு, அனைத்தும் விடுதலையோடு சார்ந்ததாகவே அமைந்திருந்தன.

1995ம் ஆண்டு இறுதியிலும், 1996ம் ஆண்டு ஆரம்பத்திலும் யாழ் மண்ணிலிருந்து மக்கள் பாரியளவில் வன்னிக்கு இடம்பெயர்ந்தனர். இக்காலப்பகுதியில் கடல் புலிகளின் சுகன்யா படையணியின் தளபதியாக பணியிலிருந்த மேஜர் கலாநிதி முல்லைதீவு சிங்கள படைத்தள அழிப்பில் தனது அணியுடன் சமரில் ஈடுபட்டாள்.

முல்லைமண் எமது மூதாதையர் மண். எமது சொந்த மண்ணான இந்த மண்ணில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைத்தளம் முற்றாக அழிக்கப்பட்டு, வரலாற்றில் பாரிய வெற்றியை விடுதலை இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கம் பெற்றிருந்தது மட்டுமல்லாத சிங்கள அரசின் படைச்சமநிலையில் மேலோங்கியும் இருந்தனர். இந்த நிலையில் வெளிநாடுகளின் பார்வை விடுதலைப் புலிகள் இயக்கமீது விழுந்ததனால் தங்கள் பிரதிநிதிகளை விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் சந்திப்பை ஏற்படுத்த அனுப்பி வைத்தனர்.

எமது பலம் அதிகரிக்கப்படும் போது, எம்மை அணுகுவதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் வெளிநாடுகள் முன்வரும் " என்ற தேசியத் தலைவரின் கருத்துக்கேற்ப எல்லாம் நடந்தேறி வந்தன. இச் சிங்களக் படை தள அழிப்பில் ஈடுபட்டு தங்களை அர்ப்பணித்த அனைத்துப் போராளிகளுக்கும் இந்நிகழ்வுகள் அர்ப்பணிக்கப்படுகின்றன. ஏனெனில் இழப்புக்களின் மூலம் எமது இழந்த தாய்நாட்டை மீட்டெடுக்கும் புனிதப் போரின் வெற்றியின் அடையாளங்களாக இம் மாவீரர்கள் என்றும் தமிழர் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார்கள்.

தனது இனிமையான குரலால் விடுதலைக்கானம்பாடி போராளிகளையும் மக்களையும் விடுதலை உணர்வுக்குள் கட்டி வைத்திருந்த மேஜர் சிட்டு பிறந்ததும் வடமராட்சி கிழக்கு மண்தான் என்பதில் வரலாற்றுப் பெருமையை அந்த மண் பெற்றுக்கொள்கின்றது.

ஏனெனில் மேஜர் சிட்டுவின் குரல் இன்னும் என்றும் எமது காதுகளில் கேட்டுக்கொண்டேயிருக்கின்றது. விடுதலைக்காகப் போராடுகின்ற மக்கள் மத்தியிலிருந்து பல்வேறு உணர்வாளர்கள் தங்களின் நிலையில் உள்ளத்திலிருந்து எழுகின்ற உணர்வுப் பெருக்கை எழுத்தாலும் இசையாலும் வெளிப்படுத்தி எங்கும் தமிழ் உணர்வு என வாழ்ந்த காலம் மறக்க முடியாததாகும்.

வற்றாத ஊற்றாக தமிழுணர்வும் விடுதலை உணர்வும் பொங்கியெழுந்த காலத்தில் புலியாக எழுந்து விதையாக விழ்ந்த ஆயிரக்கணக்கான மாவீரர்களின் புகழ்பூத்தமண்ணில் புதிய புறநானூற்றை களத்தில் கண்டோம். போரில் புற முதுகு காட்டாமல் எதிரியை நேருக்கு நேர் சந்தித்த வீரத்தை எமது மண்ணில் நீண்ட காலத்திற்குப் பின்பு எமது மக்கள் நேரில் கண்டு போர்ப்பரணி பாடியதையும் பார்த்திருக்கின்றோம். உலகில் தமிழன் வாழும்வரை இந்த வரலாறும் எமது தலைவர் பிரபாகரன் பெயரும் என்றும் அழியாது.

மேஜர் கலாநிதி அவர்களின் போராட்டப் பயணம் போராளிகளின் வீரம் செறிந்த விடுதலைப் போருக்கு இலக்கணமாக அமைந்திருந்தன. கடலிலும் தரையிலும் சாதிக்கும் திறனை விடுதலைப்புலிகள் இயக்கம் அவளுக்கும், அவள் போன்ற பல போராளிகளுக்கும் பெற்றுக்கொடுத்திருந்தன. அடுக்கடுக்காகப் பெண்களின் வீரம் பெரும் சாதனைகளை விடுதலை இயக்கத்திற்கு பெற்றுக்கொடுத்த வண்ணம் தொடர்ந்தபோது, முதல் கடற் கரும்புலி அங்கயற்கண்ணியின் சாதனை தமிழ் வீரப் பெண் குலத்திற்கு பெருமை சேர்த்த விடுதலை வரலாறு ஒன்றை உருவாக்கியது. என்றும் எங்கும் கண்டிராத போர்க்கவியமொன்றை எமது தாய் மண்ணில் எமது தமிழ்ப்பெண்கள் எழுதிக்கொண்டிருப்பதை ஒவ்வொரு தாக்குதல்களிலும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

வரலாற்றை எம்மால் படிக்கின்றபோது, வரலாற்றோடு வாழ்ந்த காவிய நாயகர்களைப்பற்றியும், அவர்களின் தற்கொடை பற்றியும் நாம் அறிந்திருப்பதும் அவற்றை எமது பரம்பரைக்கு சொல்லிக்கொடுப்பதும், காலத்தின் கடமையாகும். இவ்வாறு தனது இளமைக்காலத்தை இனத்தின் விடுதலைக்கு அர்பணித்த மேஜர் கலாநிதி போன்ற வீராங்கனைகளை எமது தாய்மண் என்றும் மறக்காது.

ஓயாத அலைகள் 2 தாக்குதல் நடவடிக்கையை விடுதலைப் புலிகள் 1998ம் ஆண்டு மேற்கொண்டனர். "ஜயசிக்குறு" இராணுவ ஆக்கிரமிப்பை சிங்கள அரசு மேற் கொண்டிருந்த காலப்பகுதியில் ஓயாத அலைகள் 2 யும் மேற்கொள்ளப்பட்டன. கிளிநொச்சி நகரில் நிலை கொண்டிருந்த சிங்களப் படைத்தள மீதான தாக்குதலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் படையணிகள் பங்கெடுத்தன.

இதற்காக கடல் புலிகள் அணியிலிருந்தும் ஓர் சிறப்பு அணி ஒழுங்கு செயப்பாட்டு மேஜர் கலாநிதி அவர்களின் தலைமையிலான தாக்குதல் அணி தங்களது பணியைச் சிறப்பாகச் செய்தபோது, ஏனைய படையணிகளின் தாக்குதலாலும் நிலைகுலைந்த சிங்களப் படை ஆனையிறவு நோக்கி தப்பியோடியது. ஆனையிறவு, பரந்தன் படைமுகாம்களிலிருந்து வெளியேறி உதவிக்கு வந்த இராணுவத்தினரை லெப் கேணல் ஜீவன், லெப் கேணல் நாகேஷ் ஆகியோர் தலைமையிலான ஜெயந்தன் படையணியினர் தடுத்து நிறுத்தி போரிட்டனர்.

இதற்கு ஈடுகொடுக்க முடியாத சிங்களப்படை உதவிக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டபோது, கிளிநொச்சியிலிருந்து தப்பியோடும் முடிவை சிங்களப்படை எடுத்திருந்தது. கிளிநொச்சி படைத்தள விழ்ச்சியைத் தொடர்ந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன.

ஒவ்வொரு தாக்குதல்களிலும் ஆண்போராளிகளுக்கு நிகராக சமராடிய பெண்புலிகளின் சாதனை தமிழ்ப் பெண்குலத்தை பெருமைகொள்ளவைத்தன. மம்தா வலம்புரி கப்பல் தாக்குதல், காங்கேசன்துறை துறைமுகத்தாக்குதல், முல்லைத்தீவு கடற் பரப்பில் டோரா தாக்குதல், திருகோணமலை துறைமுகக் தாக்குதல்,என்பனவற்றிலும் மேஜர் கலாநிதியின் வீரம் தாக்குதல் மூலம் உணர்த்தப்பட்டன.

விடுதலைப்புலிகளின் கப்பல்களில் பணிபுரிந்த போராளிகளில் முதல் கப்பல் கப்டன் தரம் வழங்கப்பட்ட கடற்கரும்புலி லெப் கேணல் சிலம்பரசன் அவர்களின் சொந்த ஊரும், ஆழியவளைதான் என்பதில் அந்த ஊரில் தன்மானமிக்க தமிழ்மறவர்கள் வாழ்ந்த, வாழ்கின்ற ஊராக எம்மால் பார்ப்பதற்கு சிலம்பரசன், கலாநிதி போன்ற மாவீரர்களின் வரலாறுகள் சான்று பகர்கின்றன. தேசியத் தலைவர் அவர்களினால் இனங்காணப்பட்ட போராளிகளில் சிலம்பரசன் அவர்களும் ஒருவராவர். இவர் கடலில் விடுதலைப்புலிகளின் கப்பல் தாக்கப்பட்ட நிகழ்வில் வீரச்சாவடைந்தார்.

கிளிநொச்சிப் படைத்தள விழ்ச்சியைத் தொடர்ந்து, சிங்களப்படையின் "ஜெயசிக்குறு" நடவடிக்கை மாங்குளம் நோக்கி முன்னேற ஆரம்பித்தன. போராளிகளின் அதிரடி தாக்குதல்களால் திக்குத்திணறிய சிங்களப்படைத் தளபதிகள் தங்கள் படை வீரர்களை உற்சாகப்படுத்தும் நிலையில் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டனர். கிளிநொச்சி படைத்தளத் தாக்கியழிப்பில் ஈடுபட்ட போராளிகளின் படையணிகள் மாங்குளம் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டபோது, மேஜர் கலாநிதியின் அணியும் இணைக்கப்பட்டன.

சிங்கள இராணுவத்தினரை கனகராயன் குளத்தில் தடுத்து நிறுத்தும் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டபோது மேஜர் கலாநிதியின் அணியும் பெரும்சமரில் ஈடுபட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பொறுத்த வரையில் களத்தில் தலைமை தாங்கும் தளபதிகள் முன்னேறித் தாக்கும்பணியில் என்றும் பின்னிற்பதில்லை. இது விடுதலைப் புலிகளில் போரியல் வரலாற்றில் பதியப்பட்ட ஒன்றாகும்.

களத்தில் பாய்ந்து சென்று எதிரியைத் தாக்கும் தளபதிகள் வரிசையில் மேஜர் கலாநிதியும் தனது அணிக்கு கட்டளைகளைப் பிறப்பித்த வண்ணம் உக்கிர சமராடினாள். இந்த நிகழ்வில் எதிரியின் எறிகணைத் தாக்குதலில் 1998ம் ஆண்டு 10ம் மாதம் 6ம் நாள் தமிழீழத் தாய் மண்ணில் தனது பணியை நிறைவு செய்து கனகராயன்குள மண்ணில் தனது இரத்தத்தைச் சிந்தி கடமையை முடித்து கண் மூடினாள்.

இழப்புக்கள் ஈடுசெய்ய முடியாததொன்றாகும். ஆனால் மேஜர் கலாநிதி, தனது இழப்புக்கேற்ற விதத்தில் எண்ணற்ற வீராங்கனைகளை தாய் மண்ணின் விடுதலைக்காக வளர்த்தெடுத்திருந்தாள். ஒரு அன்பான அன்னையைப் போன்று தம்மை வழிநடத்திய தளபதியை இழந்த சோகத்தில் திளைத்திருந்த போராளிகள் அவளின் வளர்ப்பு, போராட்டப்பணி, தலைவர் மீது கொண்டபற்று, மண்ணின் விடுதலை என்பன ஒருங்கே சேர, உணர்வுடன், உறுதியுடன் நெஞ்சினில் மேஜர் கலாநிதியின் நினைவுகளை ஏந்தி போராட்டப் பயணத்தில் தொடர்ந்தனர்.

என்றும் மேஜர் கலாநிதி உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரின் நெஞ்சினில் உறைந்திருப்பாள். குடும்பம், ஊர், வட்டம் என்ற வகைக்குள்ளும் இவளின் நினைவுகள், போராட்ட இலட்சியம் புனிதப் பயணம் என்பன உறங்கிக் கிடந்தாலும், அழியாமல், மங்காமல் மறையாமல் தொடரும்.


தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுன் பல களங்களில் களமாடி பல போராளிகளை வளர்த்தெடுத்து வெற்றியை அள்ளி தந்த எங்கள் அக்கா மேஜர் கலாநிதிக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

எழுகதிர்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us