ஈழம்

ஈழம்

வெள்ளி, 4 ஜனவரி, 2013

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் வீரவணக்க நினைவு நாள்.

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களைப்பற்றி பல நினைவுக் கட்டுரைகள் நினைவு மலர்கள் தமிழிலும் வெளி நாடுகளில் ஆங்கிலத்திலும் வெளியாகியிருப்பதை பலர் அறிவார்கள். ஆனால், ஆங்கில நினைவு மலர்களில் வெளியானவற்றை பலர் அறியாமல் இருப்பார்களென நினைத்து சிலவற்றை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது.

குமார் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் மாபெரும் குரல் மௌனிக்கச் செய்யப்பட்டது. (கரென் பார்கர் - பிரதம ஐ.நா. பேராளர் சர்வதேசக் கல்வி அபிவிருத்தி/ மனிதநேய சட்டக் கருத்திட்டம்)

சர்வதேசக் கல்வி அபிவிருத்தி/ மனிதநேயச் சட்டக் கருத்திட்டம் எனும் எமது அமைப்பானது 18 வருடங்களாக இலங்கையில் நிலவிவரும் மோதலில் மனித நேயச்சட்ட நியதிகள் பிரயோகம் செய்யப்பட வேண்டுமென்பதற்காகப் பணியாற்றியுள்ளது.

இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் பிரச்சினைகளையிட்டு ஒரு மதிக்கத்தக்க பேச்சாளராக விளங்கினார். அவர் எங்கள் அமைப்பினால் மட்டுமல்ல, உலகெங்குமுள்ள இதுபோன்ற அநேக மனித உரிமைகள் அமைப்பினாலும் மதிக்கப்பட்டார்.

சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள உலகளாவிய கிறிஸ்தவ பேரவையில் அவரைக் கௌரவிக்கும் வகையில் எமது இணை அனுசரணையுடன் ஒரு ஞாபகார்த்த வழிபாட்டை நடாத்துகின்றோம். இதில் மாபெரும் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து கொள்கின்றன. மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் நடுநிலையம் அமர்வு கொண்டிருக்கும் ஜெனீவாவில் இது நிகழ்த்தப்படுவதும் மிகப் பொருத்தமானதே.இங்கு இடம்பெறும் ஐ.நா. அமர்வுகளில் மனித உரிமைகளுக்கான ஒரு மாபெரும் வழக்கறிஞராக அவர் திகழ்ந்தார். அநேக தடவைகளில் எமது அமைப்பினைப் பிரதிநிதித்துவம் செய்த அவர் நடைமுறையில் உள்ள மனித உரிமைகள் மற்றும் மனித நேயச் சட்ட நியதிகளின் ஒளியில் இலங்கைத்தீவில் தமிழர் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சொற்திறன் மிக்க ஒரு பேச்சாளராக விளங்கினார். தெளிவான பேச்சுத்திறனுடன் எப்போதும் மனித உரிமைகளின் காப்பாளராக விளங்கிய குமார் இலங்கையில் நிலவும் முரண்பாட்டிற்குத் தீர்வுகாணுமுகமாக மிதவாதத்தினதும் நியாயத்தன்மையினதும் குரலாகத் தனித்தே செயற்பட்டவராக எம்முன் நிற்கிறார். அவரது நாவன்மையையும், கனவான் பண்பையும் இன்மகிழ் நோக்கையும் அர்ப்பண சிந்தையையும் நாம் என்றும் மறவோம்.

தமிழ், சிங்களம் ஆகிய தன் தேசிய அடையாளம் இரண்டையும் வெளிப்படுத்துவதற்கான தனது போராட்டத்தில் இலங்கையானது ஒரு பிரதான பங்கேற்பாளரை இழந்துள்ளது. உடன்பாடொன்று எட்டப்படக் கூடியதாயிருந்த சமயத்தில் சிங்களத் தீவிரவாதப் போக்குடையோர் அவரைப் படுகொலை செய்வதையே தமது தெரிவாகக் கண்டிருப்பது எத்துணை கவலையளிப்பதாக உள்ளது. இலங்கையில் தமிழர்களின் நிலை எத்தகையது என்பதை உலகமாவது அறிந்துள்ளது எனவும் அந்த வகையில் குமாரின் வாழ்வு வீணாகிப் போய்விடவில்லையெனவும் நாம் நம்புகிறோம்.

தனது மனித மற்றும் மனிதநேயச் சட்ட உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் எனக் கோருவதில் சர்வதேச சமூகம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன், இனப்பிரச்சினையில் குமார் பொன்னம்பலத்தின் மாபெரும் பங்களிப்பை எவரும் மறந்து விடக்கூடாது.

2000 ஆம் ஆண்டில் இலங்கைத்தீவின் சமாதானத்தை நாடும் உங்கள்,கரென் பார்க்கர் பிரதம ஐ.நா. பேராளர் சர்வதேசக் கல்வி அபிவிருத்தி / மனிதநேயச் சட்டக் கருத்திட்டம் ஐக்கிய நாடுகளால் (செயலாளர் நாயகத்தின் பட்டியலில் இடம்பெற்றது. நம்பிக்கைச் சான்றளிக்கப்பட்ட ஓர் அமைப்பு).

நீதிபதியினதும் வழக்கறிஞர்களினதும் சுதந்திரத்திற்கான நடுநிலையம், ஜெனீவா (சுவிற்சர்லாந்து)

இலங்கை: வழக்குரைஞர் குமார் பொன்னம்பலத்தின் கொலை குறித்துப் பூரண விசாரணையொன்றை நடாத்துமாறு சட்ட வல்லுநர்கள் அரசாங்கத்தைக் கோருகின்றனர்.

2000 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி சட்டத்தரணி குமார் பொன்னம்பலம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டமை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்து ஜெனீவாவில் உள்ள நீதிபதிகளினதும் வழக்குரைஞர்களினதும் சுதந்திரத்திற்கான நடுநிலையம் (CIJL) இலங்கை அரசாங்கத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது. பொன்னம்பலம் அவர்கள் ஐந்து தடவைகள் சுடப்பட்டுள்ளாரெனப் பிரேத பரிசோதனையறிக்கை தெளிவாகத் தெரிவித்தது.

பொன்னம்பலம் பிரசித்திபெற்ற ஓர் எதிர் வழக்குரைஞராகத் திகழ்ந்தார் என்பதையும் மனித உரிமைகள் சார்ந்த அநேக வழக்குகளில் தம் கட்சிக்காரர்களுக்காக வாதாடியுள்ளார் என்பதையும் CIJL நிறைவு கூர்ந்தது. தமது கட்சிக்காரர்களின் பயனுறுதியான பாதுகாப்புக்காக வாதிட்டார் என்பதற்காகவே அவர் படுகொலை செய்யப்பட்டாரெனக் கூறி CIJL வருத்தம் தெரிவிக்கிறது.

பல்வேறு விடயங்களில் பொன்னம்பலம் தன் மனதைத் திறந்து பேசினார். அவர் தெரிவித்த கருத்துக்கள் அரசாங்கத்தை எப்போதும் மகிழ்விப்பதாக இருந்ததில்லை. உண்மையில், 1998 நவம்பர் 17 ஆம் திகதி தொலைக்காட்சியொன்றுக்கு அவர் வழங்கிய நேர் காணலையடுத்து அவரைக் கைதுசெய்வதற்கான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டபோது 1998 டிசம்பரில் இஐஒஃ அவர் சார்பாகத் தலையிட்டது.

பொன்னம்பலம் அவர்களின் படுகொலை குறித்து முழுமையான விசாரணையொன்றை ஏற்பாடு செய்யுமாறும் குற்றவாளிகளை நீதிக்குமுன் கொண்டுவரப் பயனுறுதியான, பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கையின் சட்டமா அதிபரை CIJL வற்புறுத்தியது.

" அமெரிக்க ஜுரர்கள் சங்கத்தின் பிரகடனம் "

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பொருளாதார மற்றும் சமூகப் பேரவையின் ஆலோசகர் அந்தஸ்துடைய அரசசார்பற்ற நிறுவனமான அமெரிக்க ஜுரர்கள் சங்கம் இலங்கையில் கொழும்பு வெள்ளவத்தையில் தை 5 ஆம் திகதி குமார் பொன்னம்பலம் என எல்லோராலும் அறியப்பட்ட திரு ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஜூனியர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டிக்கின்றது. பல ஆண்டுகளாக மனித உரிமைகளின் தீவிர செயற்பாட்டாளராக விளங்கிய திரு பொன்னம்பலம் கொழும்பில் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு வழக்கறிஞராகத் திகழ்ந்தார். பொன்னம்பலம் நீண்டகாலமாகக் கொலை அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து வந்திருந்தமையும் எமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. குமார் பொன்னம்பலம் அவர்களின் மரணமானது இலங்கைக்கும் தமிழ் சமூகத்திற்கும் துயர் தரும் ஓர் இழப்பாகும்.

புகழ்பெற்ற நிபுணத்துவம் வாய்ந்த ஒரு குற்றவியல் வழக்கறிஞர் என்ற வகையில் பொன்னம்பலம் மனித உரிமை மீறல்கள் காரணமாகத் துன்பத்திற்குள்ளான பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் மக்கள் சார்பாக எதிர் வழக்காடினார். மனிதவுரிமை வழக்குகள் சார்ந்த முக்கிய அறிக்கையையும் அவர் பதிவுசெய்து வைத்தார்.

சர்வதேச சமூகத்தின் மனித உரிமைகளுக்காகவும் பொன்னம்பலம் உரத்துக் குரல் கொடுத்தார். 1997 இலும் 1999 இலும் மனித உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவில் இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிரான சித்திரவதை, தான் தோன்றித்தனமான தடுத்துவைப்பு, காணாமற் போதல்கள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் என்பவற்றை எதிர்த்து வெளிப்படையாகக் கண்டனம் தெரிவித்தார். பல முக்கிய சர்வதேச சபைகள் மத்தியில், பிரசெல்ஸில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் லண்டனில் உள்ள அரச நிறுவன உறுப்பினர்கள் மத்தியில் அவர் பேரூரையாற்றினார்.

பொன்னம்பலம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் என்பவற்றுக்காகத் துணிச்சலோடு தளராமற் போராடிய ஓர் வெற்றி வீரனாகத் திகழ்ந்தார். மனித உரிமைகள் குறித்து உரத்துப் பேச அவர் அஞ்சியதில்லை. இதற்காகத் தம் உயிரையே அவர் விலையாகக் கொடுக்க நேரிட்டது. இப்படுகொலையானது நீதிக்காவும் மனித உரிமைகளுக்காகவும் போராடும் அனைவருக்கும் துயர் தரும் ஒரு பேரிழப்பாகும்.

இக்காரணங்களின் நிமித்தம் ஈவிரக்கமற்ற, படுபாதகமான இச்செயலை மிகக் கடுமையாகக் கண்டிக்குமாறு அனைத்துத் தனிநபர்களுக்கும் மனித உரிமை அமைப்புக்களுக்கும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். மேலும், சுதந்திரமான விசாரணையொன்றை மேற்கொண்டு துயர் தரும் இம்மரணத்திற்குப் பொறுப்பாயிருப்பவர்களுக் கெதிராக புறம்பான படுகொலைகள் பற்றிய விசேட புலன் விசாரணையாளரான திருமதி அஸ்மா ஜஹாங்கீர் அவர்களை, இலங்கை அரசாங்கத்தின் உதவியைப் பெற்று இக்குற்றச் செயல்குறித்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை நீதிக்குமுன் நிறுத்துமாறு விதந்துரைக்கின்றோம்.

தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை அரசாங்கத்தால் இழைக்கப்படும் அட்டூழியங்களுக்கெதிராக குரல் கொடுப்பதற்காகதான் உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம் என்று குமார் எப்போதும் எம்மிடம் கூறிவந்த போதிலும், இந்த ஆபத்துக் குறித்து நாம் முனைப்புடன் விழிப்புணர்வு கொண்டிருந்த போதிலும், அவரது படுகொலை எமக்கொரு பேரதிர்ச்சியாகவே இருந்தது. என்னால், அதை நம்ப முடியவில்லை.

முதன்முதல் குமாரை நான் லண்டனில் ஐந்து வருடங்களுக்கு முன்பு சந்தித்தேன். அதனையடுத்து, ஐரோப்பாவிலும் மேலும் பல கனங்களிலும் பல்வேறு நாடுகளிலும் அநேக மனித உரிமை நிகழ்வுகள், கருத்தமர்வுகள், செயலமர்வுகள் என்பவற்றின் போதும் அவரைச் சந்தித்துள்ளேன். கூட்டங்களில் பங்குபற்றிய, மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசியவாறு எங்கெங்கு குமார் பயணம் செய்தாரோ, அங்கெல்லாம் அவரது சக்தி, அவரது பற்றுறுதி, அவரது துணிவு என்பவற்றால் எழுச்சியூட்டப்பட்ட அவரைச் சுற்றிவர இருப்பவர்களில் ஒரு மேலதிகசக்தியும் தன்னம்பிக்கையும் காணப்பட்டது.

மனிதஉரிமைகள் தொடர்பான பல்வேறு விடயங்களில் குமாருடன் பணியாற்றக்கிடைத்தமையானது ஒரு மாபெரும் வரப்பிரசாதமாகும். அவரது ஆழ்ந்த இறை நம்பிக்கையும் மற்றும் அனைத்தையும் அவர் தம் மனச்சாட்சிப்படியே செய்து வந்தார், என்ற உண்மையும் கருத்தைக் கவர்வதாகவும் உணர்ச்சியூட்டுவதாகவும் இருக்கின்றன. மனித உரிமை தொடர்பிலான தன் நடவடிக்கைகளின் பொருட்டுத் தன் உயிருக்கு உலைவைக்கப்படலாம் என்பதை முழுமையாக அறிந்து கொண்டே அவர் தம் பணியில் ஈடுபட்டார்.

மனச்சான்றின்படி வாழ்வதில் அவர் கொண்டிருந்த இந்த உறுதியான நிலைப்பாடானது தமிழ் மக்களின் கூட்டு உரிமைகளை மதித்தல், அவர்களது சுய நிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி அங்கீகரித்தல், மற்றும் வடக்கு, கிழக்கில் தமது சொந்தத் தாயகத்தில் பாதுகாப்பாக வாழவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொள்ளல் என்பவற்றால் மட்டுமே நாட்டிலுள்ள மோதலுக்கு நிலையான தீர்வு ஒன்றைக்காண முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையையும் மனத்திட்டத்தையும் உள்ளடக்கியிருந்தது.அவரது இழப்பையிட்டு உலகெங்கும் வாழும் தமிழர்களால் வெளியிடப்பட்ட துயர் பகிர்வுகளில் எதிரொலிக்கின்ற உணர்வலைகள் காட்டுவதிலிருந்து அவரது படுகொலையே அநேக தமிழர்களை தெளிவான இத்தீர்மானத்திற்கு வரச் செய்துள்ளது தெரிகிறது.

குமாரை நேரடியாகச் சந்தித்த அனைத்து மட்டங்களிலுமான சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதேச சபைகள் என்பவற்றின் ஆர்வலர்கள் அர்ப்பணத்துடனான அவரது பணியை மெச்சுகின்றனர். எப்போதும் அவரது துணைவியார் யோகி சகிதம் வலம்வரும் குமார் மனித உரிமைகள், சமாதானம் மற்றும் நீதி என்பவை குறித்தான உணர்ச்சி ததும்பும் தனது தாகத்தினை வெளிப்படுத்திப் பேச ஒருபோதும் தயங்கியதில்லை. சர்ச்சைகளைத் தவிர்த்து வசதியான ஒரு வாழ்வை அவர் வாழ்ந்திருக்கலாம். அவரது மனைவி யோகியும் தனது வாழ்க்கைத் தொழிலைத் தங்குதடையின்றி நடத்தியிருக்கலாம். இருந்தும், பற்பல இடங்களுக்கும் சென்று குரலற்றவர்களுக்காகக் குரல் கொடுக்க அவர்கள் ஒரு போதும் தயங்கியதில்லை. தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை அரசாங்கம் இழைத்துவரும் அட்டூழியங்கள் தொடர்பில் குமார் நம்பகமான உறுதியான ஒரு வழக்கைச் சர்வதேச சமூகத்தின் முன் கொண்டுவருவார்.

குமார், குடும்பத்தின் மீது பற்றுக் கொண்ட ஒரு மனிதராக விளங்கினார். தனது மகனையும் மகளையும் தொலைபேசியில் அழைத்து அவர்களது வீட்டில் உள்ளோர் அனைவரதும் சுகநலம் குறித்தும் விசாரிக்காமல் ஒருநாள் கூடக் கழித்தது கிடையாது. கடவுளையும் உண்மையையும் நீதியையும் நேசித்த சிறந்த ஒரு பண்பாளராக விளங்கிய அவர் இப்போது இல்லை. அவரை நாம் பெரிதும் இழந்து நிற்கிறோம். அவரது பிரிவு எமக்குப் பேரிழப்பாகும். இவ்விழப்பினால் முடிவில்லாத ஒரு சோகத்தினுள் நாம் தள்ளப்பட்டுள்ளோம். அவரது வாழ்வினால் தொடப்பட்டவர்களான யோகி, கஜேந்திரகுமார் மற்றும் மிருனாளினி, நண்பர்கள் மற்றும் மனித மாண்பு, நேர்மை மற்றும் பெறுமதி ஆகியவற்றின் விழுமியங்களைப் பேணி வளர்க்கத் தள்ளப்படும் உலகின் மூலை முடுக்கெங்கும் வாழும் அவரது பரந்துபட்ட மனித நேயக் குடும்பத்தினர் ஆகியோரின் மனங்களில் அவர் நினைவு என்றென்றும் வாழும்.

" தேசியத்தலைவரால் மாமனிதர் விருத்தி வழங்கி கெளரவிக்கப்படும் குமார் பொன்னம்பலம் அவரது மனைவி பிள்ளைகள் பெற்றுக்கொள்கின்றனர் "


தமிழீழ தாயக விடுதலைக்காக அரசியல் ரீதியாக களமாடி உயிர் நீத்த மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களிற்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்...

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us