ஈழம்

ஈழம்

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

தமிழர் போராட்ட வரலாற்றுத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

2004ம் ஆண்டு தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு வந்த கட்டுரையை காலத்தின் தேவை கொண்டு மீள் பிரசுரம் செய்கின்றோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் என உலகத் தமிழர்களால் வர்ணிக்கப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெருந்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இம் மாதம் 26ம் தேதி புதன்கிழமை 49 ஆவது அகவையை பூர்த்தி செய்து ஐம்பதாவது அகவையில் பிரவேசம் செய்கின்றார்.

உலகத் தமிழர் வரலாற்றில் தமிழர்களுக்கென விடுதலை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளுவதற்காக தனித்தமிழர் மரபு வழி இராணுவத்தை தரை, கடல் என கடந்து வான் படையை நிறுவுவதற்கு பற்றுறுதியோடு செயற்பட்ட வே.பிரபாகரன், கடந்த வருடத்தைப்போல சமாதானச் சூழலில் 50 ஆவது பிறந்த தினத்தை எதிர்கொள்கின்றார்.

அதை விட பதின்நான்கு வயதில் வீட்டை விட்டுப்புறப்பட்டு தமிழர் விடுதலைக்காக அல்லும் பகலும் பாடுபட்ட பிரபாகரன், இம்முறை தனது பெற்றோருடன் பிறந்த நாளை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது. வே.பிரபாகரனின் வரலாறானது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றோடு பின்னிப் பிணைந்ததாக இருப்பதால், விடுதலைப் போராட்ட பரிணாம வளர்ச்சியையும் நோக்குவது பொருத்தமானது.

இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி. வே.பிரபாகரன் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் 1954 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி வேங்கடம் வேலுப்பிள்ளை – பார்வதி தம்பதிகளின் கடைக்குட்டியாக பிரபாகரன் பிறந்தார். ஒரு அண்ணன், இரண்டு அக்காமார்களுடன் செல்லமாக வளர்க்கப்பட்ட பிரபாகரன் அவரின் தந்தையார் காணி உத்தியோகத்தராக இருந்ததால் தந்தையாரோடு நாட்டின் பல இடங்களுக்கு செல்ல வேண்டியதாயிருந்தது.

மட்டக்களப்பு கச்சேரி காணி உத்தியோகத்தராக அறுபதுகளில் கடமை யாற்றிய போது வேலுப்பிள்ளை பிரபாகரன் தாமரைக்கேணி வீதியில் பெற்றோருடன் வசித்து வந்ததுடன் முதலாம், இரண்டாம், மூன்றாம் வகுப்புக்களை தற்போது மகாஜனாக் கல்லூரி என்றழைக்கப்படும் அரசடி மெதடிஸ் மிசன் பாடசாலையில் கற்றார். பின்னர் வல்வை சிதம்பராக் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.

மட்டக்களப்பில் நான் வசித்தபோது எனக்கு ஆறேழு வயதிருக்கும். வீரபாண்டிய கட்டப்பொம்மனின் வசனங்களைப் பேசுவதிலும் சரித்திர வரலாற்று நாவல்கள் வீர புருஷர் காவியங்களை விரும்பிப் படித்தேன். அலெக்சாந்தர், நெப்போலியன் போன்றவர்களின் வீர வரலாறுகளை இப்படியான நூல்கள் மூலமே அறிந்தேன்.


இந்திய விடுதலைப்போராட்டம் பற்றியும் அதற்கு தங்களையே தற்கொடையாக்கிய சந்திரபோஸ், பகவத்சிங், பாலகங்காதர திலகர் போன்றோரில் எனக்கு ஏற்பட்ட பற்றும் கரிசனையும் இந்த வாசிப்பின் விளைவுகள் தான். எனது போராட்ட வாழ்வின் அத்திவாரம் இத்தகைய நூல்களால் கட்டியெழுப்பப்பட்டது. அந்நியர் ஆட்சியின் ஆதிக்க அடக்கு முறைகளுக்கெதிரான கொதிப்புணர்வு இந்த வாசிப்புப் பழக்கத்தினாலேயே ஏற்பட்டது என, புலிகளின் தலைவர் பிரபாகரன் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார்.

பிரபாகரன் நான்கு வயது சிறுவனாக இருந்த போது நிகழ்ந்த 1958 இனக் கலவரங்களின் கோர அழிவுகளைக் கேள்விப்பட்டார். அவருக்கு திமிழ் மக்கள் மீது ஆழ்ந்த பரிவும் அனுதாபமும் ஏற்பட்டது. நிராயுதபாணிகளான அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக ஆயுத வலிமையை பிரயோகிக்கும் பேரினவாத இயந்திரத்தை ஆயுதப் போராட்டம் மூலமே எதிர்கொள்ள முடியுமென்பதை உணர்ந்தார். எழுபதுகளின் பின்னர் தரப்படுத்தல் பிரபாகரனை பெரிதும் பாதித்தது.

அத்தோடு அவர் வாழ்ந்த வல்வெட்டித்துறை பிரதேசம் அந்தக் காலத்திலேயே இராணுவ அடக்கு முறைகளை எதிர்கொண்டதை சிறுவன் பிரபாகரன் நேரில் கண்டதால் அவருக்கு வெறுப்புணர்ச்சி மேலோங்கியது. இது பற்றித் தெரிவித்த பிரபாகரன், நான் சிறுவயதில் சண்டித்தனமான ஆளும் அல்ல, யாருடனும் சண்டைக்கு போவதுமில்லை. ஆனால் எனது ஊரில் இராணுவத்தின் அடக்குமுறை தன்னில் பாதிப்பை ஏற்படுத்தியது என தெரிவித்திருக்கின்றார்.

அத்தோடு தனக்கு விடுதலை உணர்வை ஏற்படுத்தியவர்களில் வேணுகோபால் மாஸ்டரை பிரபாகரன் குறிப்பிடத் தவறுவதில்லை. தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணி உறுப்பினராக இருந்து பின்னர் அக்கட்சியின் தீவிரம் போதாது என்பதால் சுயாட்சிக் கழகத்தில் இணைந்த வேணுகோபால் மாஸ்ரர் விடுதலைப் போராட்டத்தின் தேவைகள் குறித்து வகுப்புக்கள் எடுத்தார்.

இவரே ஆயுதப்போராட்டத்தின் தேவையையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றார். தனது பதினாறாவது வயதில் ஏழு நண்பர்களுடன் சேர்ந்து பெயரில்லாத இயக்கத்தை ஆரம்பித்தார். தலைமறைவாக தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்ட போது இவரும் நண்பர்களும் தேடப்படும் நபர்களானார்கள்.

நண்பர்கள் மெல்ல மெல்ல விலகிச் செல்ல ஒரு நாள் பிரபாகரன் தாயைச் சந்தித்தார். பெரியசோதி, நடேசதாசன், உனது அண்ணன் கூட வெளிநாடு போய்விட்டார்கள். நீயும் போயேன் என்று அம்மா கேட்டார். அதற்கு நான் போகமாட்டேன், போறதுக்காக நான் வரவில்லை என்று கூற, அவங்களை நம்பித்தானே நீ போராட வெளிக்கிட்டாய் என்று சொன்னார்.


இதற்கு பதிலளித்த பிரபாகரன் “நான் அவர்களை நம்பி வரவில்லை”, என்று கூற அவரது தாயாரோ ஒரு மொட்டையனுடன் சேர்ந்து என்ன செய்யப்போகின்றாய் என்று கடிந்தார். அதற்கு சீற்றமாக, “ஒரு மொட்டை 9 மொட்டைகளாகும், 9 மொட்டை 90 மொட்டைகளாகும், 90 மொட்டைகள் 900 மொட்டைகளாகும்” என்று தாயாருக்குப் பதிலளித்தார்.

இவ்வாறு வே.பிரபாகரனின் சிறுவயதுக்காலம் இனத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற பேரவாவுடனும் தீர்க்கமான சிந்தனையுடனும் வளர்ந்தது. 1971 இலிருந்து வீட்டை விட்டு முற்றாக விலகிய பிரபாகரன் தமிழ் மாணவர் பேரவை சத்தியசீலனோடு இணைந்தார், தொண்டரானார்.

ஆனால் தமிழ் மாணவர் பேரவையை நிறுவனமயப்படுத்தி கொள்கை வழியில் வழிநடத்த நடவடிக்கை எடுக்கப்படாததால் அதிருப்தியுற்றார். இந்த நிலையில் சத்தியசீலன் தலைமறைவாகி பின்னர் கைது செய்யப்பட்டார். பொலிசாரின் பார்வையிலிருந்து தப்பி 1973 இல் தமிழகம் சென்ற பிரபாகரனுக்கு ஈழத்துப் பெரியார் (இராசரத்தினம்) அவர்களுடனான சந்திப்பு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. புதிய தமிழ்ப்புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தார்.

கடந்த காலங்களில் உருவான அமைப்புக்களின் அழிவுக்காக காரணங்களை அறிந்து அதற்கேற்ப உறுதி ஒழுக்கம், கட்டுப்பாடு என்பவற்றை கடுமையாக அமுல்படுத்தினார். 1974 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி தமிழாராட்சி மாநாட்டுப் படுகொலை தமிழ் இளைஞர்கள் மத்தியில் விடுதலைப் போராட்டத் தீவிரத்தை வளர்த்தது. 1976 ஆம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி வவுனியா பூந்தோட்டத்திலுள்ள முகாமில் வைத்து புதிய தமிழ்ப்புலிகள் தமிழீழ விடுதலைப்புலிகளாக பெயர் மாற்றம் பெற்றது.

அத்தோடு இழந்த இறைமையை மீட்பதில் மட்டுமல்ல தமிழர்களுக்கென தனிக்கொடியை உருவாக்க முனைந்தார். 1977 ஆம் ஆண்டு புலிகள் இயக்கக் கொடியாக இருந்த புலிக்கொடியிலிருந்த எழுத்துக்கள் நீக்கப்பட்டு 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாவீரர் ஆரம்ப நாளன்று தமிழீழ தேசியக் கொடியை பிரபாகரன் ஏற்றினார்.

புலனாய்வில் ஈடுபட்ட தமிழ் பொலிசார் மீது தாக்குதலை நடத்திய விடுதலைப்புலிகள் 1981 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் திகதி இராணுவத்தினர் மீது முதலாவது தாக்குதலை தொடுத்தனர். கடந்த 27 வருடங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளை வழி நடத்தி வரும் வே.பிரபாகரனின் பிறந்த நாளை போராளிகளும், தமிழர் தேசமும் எதிர் கொண்டாலும், அவர் அன்றைய தினம் நோன்பிருந்து, முதல் களப்பலியான மாவீரர் சத்தியநாதன் சங்கரை நினைவு கூர்ந்து வருகிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கு முளையிலே கிள்ளி எறிய 1979 ஆம் ஆண்டு மே மாதம் புலிகள் தடைச்சட்டமும் செப்டெம்பரில் பயங்கரவாத தடைச்சட்டமும் கொண்டு வரப்பட்டது. 1979 ஆம் ஆண்டு யாழ்- குடாவில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு இராணுவ அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. விட்டில் பூச்சியாக அழிய முனையாது தனது தோழர்களுடன் வன்னி அம்பகாமம் வந்து படிப்படியாக விரிவாக்கம் செய்வதில் பிரபாகரன் தீவிரமாக செயற்பட்டார்.

1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலையைத் தொடர்ந்து தீவிரவாதத்தின் பால் இளைஞர்கள் குழாம் ஈர்க்கப்பட்ட போதிலும் பிரபாகரன் ஆளணியை பெருக்குவதில் ஆர்வம் காட்டாது, இறுக்கமான கட்டுக்கோப்பான இயக்கமாக தமது அமைப்பை வழிநடத்தினார்.

1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலாம் திகதி தமிழ் நாடு திருப்போரூர் முருகன்ஆலயத்தில் மதிவதனியை திருமணம் புரிந்த பிரபாகரன் தம்பதிகளுக்கு இல்லற வாழ்வில் மூன்று குழந்தைகள்.

மூத்த மகனுக்கு போராளி சாள்ஸ் அன்ரனியின் பெயரைச் சூட்டினார். இரண்டாவது பெண்குழந்தைக்கு துவாரகா என பெயரிட்ட பிரபாகரன் தம்பதிகள் மூன்றாவது மகனுக்கு பாலச்சந்திரன் என்ற பெயரைச் சூட்டி போராளிகள் மீதான பற்றை வெளிப்படுத்தினார்கள்.

1983 ஆம் ஆண்டைத் தொடர்ந்து பொலிஸ் நிலையங்கள் யாழ் குடாவில் படிப்படியாக முடக்கப்பட்டதுடன் இராணுவத்தினரும் முகாம்களை விட்டு வெளியேற முடியாது தடுக்கப்பட்டனர். வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் புலிகளுக்கு சவாலாக அமைந்தாலும் சுதாகரித்துக் கொண்டார்கள்.

இந்திய அமைதிகாக்கும் படையினராலும் பின்னர் பிறேமதாச அரசாங்கம், சந்திரிக்கா அரசாங்கம் என்பவற்றினால் கொடுக்ப்பட்ட நெருக்கடிகளிலிருந்து இயக்கத்தை வழிநடத்தி இன்று பலம் மிக்க மரபுப் படையணியாக விடுதலைப் புலிகளை பிரபாகரன் வழிநடத்தி தமிழர் சமபலத்தை பேணி இப்போது சமாதான நடவடிக்கை மூலம் அரசியல் தீர்வு காண சிங்கள தேசத்துக்கு வாய்ப்பளித்திருக்கிறார்.

ஆகாய கடல் வெளிச்சமர், மணலாறு சமர், தவளை நடவடிக்கை, கொக்குத் தொடுவாய் சமர், இடிமுழக்கம், ஓயாத அலைகள் -1, சத் ஜெய -2,3 முறியடிப்பு சமர், பரந்தன் ஆனையிறவுச் சமர், வவுணத்தீவு சமர், கிளிநொச்சி பரந்தன் முகாம்கள் மீதான ஊடுருவல் தாக்குதல் ஓயாத அலைகள் -2, ஜெயசிக்குறு முறியடிப்பு சமர், ஓயாத அலை-3 , ஓயாத அலை -4, தீச்சுவாலை முறியடிப்பு சமர் எனப் பல சமர்கள் புலிகள் தலைவர் வே.பிரபாகரனின் இராணுவ வழிநடத்தலுக்கு சான்று பகரும்.


விடுதலைப்புலிகள் பல்வேறு நெருக்கடிகள், அடக்குமுறைகள், அழுத்தங்கள், சவால்களுக்கு முகம் கொடுத்தும் மரபு வழி சமரணியாக தமிழ் மக்களுக்கு பலம் சேர்க்கும் அணியாக விரிவாக்கம் பெறுவதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொள்கைப் பற்று, விடுதலை வேட்கை, தன்னம்பிக்கை, துணிச்சல், புலனாய்வுத்திறன், எதிரிகளையும் நண்பர்களையும் பிரித்தறியும் ஆற்றல், போராளிகளை அரவணைத்துச் செல்லும் பரிவு போன்றன முக்கிய காரணங்களாகும்.

சாதாரண புலி உறுப்பினர் ஒருவர் கூட தலைவரைப் பற்றி உரையாற்றும் போது மெய் சிலிர்ப்பதை தனிமனித வழிபாடாக சிலர் விமர்சித்தாலும் பிரபாகரன் என்ற ஆளுமையே வடக்கு கிழக்கு என்று விரிந்து பரந்து இளைஞர் அணியாக தமிழர் தேசம் ஒருமைப்பட காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

பல உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் வேலுப்பிள்ளை பிரபாகரனை திசைதிருப்ப, விலைக்கு வாங்க அல்லது விடுதலைப் புலிகளை பிளவுபடுத்த பலவீனப்படுத்த, மக்களிடமிருந்து அன்னியப்படுத்த மேற்கொண்ட பகீரதபிரயத்தனங்களைக் கடந்து விடுதலைப் புலிகளை வழிநடத்தி வருகின்றார்.

தமிழ் மக்களின் பலமாக, மக்களிடமிருந்து பிரிக்க முடியாதபடி விடுதலைப் புலிகள் வியாபித்து வேரூன்றி விருட்சமாகியதற்கு புலிகள் தலைவரின் பற்றுறுதியான அர்ப்பணிப்பு முக்கிய காரணமாகும். கால் நூற்றாண்டு கால படைத்துறை அனுபவம், பல நெருக்கடிகள், சவால்களை முறியடித்த ஆற்றல் கொண்ட தமிழ் மக்களின் விலை மதிக்க முடியாத சொத்தான வே.பிரபாகரன் பொன் விழா அகவையில் பிரவேசிக்கின்றார்.

அவரின் அனுபவ ஆற்றல் இன்று சமாதான நடைமுறைகளிலும் பிரகாசிக்கின்றது. புரிந்துணர்வு ஓப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது மட்டுமல்ல, சீண்டல்களால் சீற்ற மடையாது சர்வதேசமே மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு சமாதான நடைமுறைகளை பொறுமையோடு கையாண்டு வருகின்றார். சிறிலங்கா அரசாங்கம் புலிகள் தலைவரையும் அமைப்பையும் பயங்கரவாத அமைப்பாக சித்தரித்து  உலக அரங்கில் ஏற்படுத்திய அபிப்பிராயத்தை மாற்றுவதில் கடந்த 18 மாதங்களாக விடுதலைப் புலிகளின் தலைவர் வெற்றி பெற்றுளார்.

இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி என்று கூறும் புலிகள் தலைவரைப் பற்றி சுதந்திர வேட்கை நூலில் திருமதி அடேல் பாலசிங்கம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ‘அவரது அரசியல் இலட்சியத்தினை ஆழமாகப் பார்த்தால் அவரை ஒரு நாட்டுப்பற்றுடைய தேசிய வாதியாகவே கருத முடியும். சில சிங்கள விமர்சகர்கள் வாதிடுவது போல பிரபாகரனின் தேசியவாதம் இன வெறியை பிரதிபலிக்கவில்லை.

தமிழ் மக்களை இன ரீதியாக அழித்தொழிக்க வேண்டுமென்ற சிங்கள இனவாத ஒடுக்கு முறையை முறியடிக்க வேண்டுமென்பதில் பிரபாகரன் திடசங்கற்பம் பூண்டு நிற்கின்றார். அந்த திடசங்கற்பத்திலிருந்து பிறந்தது தான் பிரபாகரனின் ‘தமிழ்த் தேசியப்பற்று.’ என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

ஈழத்தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்புமுனைச் சக்தியான விடுதலைப் புலிகளின் பெருந்தலைவர் பிரபாகரன் பற்றிய தெளிவான வரலாற்றுநூல் படைக்கப்பட வேண்டும். இது தமிழ் புத்திஜீவிகள், ஆய்வாளர்களின் கடமையாகும். வே. பிரபாகரனின் பொன்விழா அகவையில் இந்த வரலாற்று ஆவணம் தமிழ் மக்கள் முன் படைக்கப்பட வேண்டும்.

நாட்டுப்பற்றாளர் ஜி.நடேசன்
ஊடகவியலாளர்,
வீரகேசரி, 
ஐ.பி.சி வானொலி. தமிழீழம்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us