ஈழம்

ஈழம்

சனி, 20 ஜூலை, 2013

”விடுதலைப் புலிகளின் பீரங்கிப் பலமும் சவாலான கனரக ஆயுதங்களும்“ கொழும்பு ஆங்கில வார ஏடு “த நேசன்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் பீரங்கிப் பலமும் சவாலான கனரக ஆயுதங்களும் நான்காம் ஈழப் போரின் சமநிலையை மாற்றலாம் என்று கொழும்பு ஆங்கில வார ஏடா “த நேசன்” தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் “த நேசன்” ஏட்டில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்:

இராணுவ நடவடிக்கையின் எதிர்ச்சமருக்கான தயாரிப்புக்களில் மிக நவீன கனரக மற்றும் நவீன ரக ஆயுதங்களை கொள்வனவு செய்யும் முயற்சியில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளனர்.

மூன்றாவது ஈழப்போரில் விடுதலைப் புலிகள் மிகவும் திறம்பட ஆட்டிலறிப் பீரங்கிகளை பயன்படுத்தியிருந்தனர். அவர்களின் பீரங்கிகளையும் தாக்குதல்களின் நுணுக்கமான உத்திகளையும் “ஓயாத அலைகள்” நடவடிக்கைகளின் மூலம் ஊகித்துக் கொள்ளலாம்.
யாழ். குடாநாட்டின் தென்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளிடம் இழக்கப்பட்ட ஆனையிறவுத் தளத்தை மீண்டும் கைப்பற்றும் பொருட்டு 2001 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட “தீச்சுவாலை” படை நடவடிக்கையை அவர்கள் முற்றாக முறியடித்திருந்தனர்.


அந்த நேரத்தில் விடுதலைப் புலிகளின் ஆட்லறிகள்.

152 மி.மீ நீண்டதூர பீரங்கி – 01,

130 மி.மீ பீரங்கி – 01,

122 மி.மீ களமுனை பீரங்கிகள் – 02

ஆகியவற்றையே கொண்டிருந்தனர்.

152 மி.மீ பீரங்கி ஆனையிறவுப் படைத்தளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது.

இரு 122 மி.மீ பீரங்கிகளும் முல்லைத்தீவு முகாம் தாக்குதலில் கைப்பற்றப்பட்டது.

இந்த பீரங்கிப் பலத்துடன், மோட்டார் ஏவுகருவிகளையும் அதிகளவில் அவர்கள் கொண்டிருந்தனர்.

120 மி.மீ, 81 மி.மீ, 60 மி.மீ போன்ற கனரக மற்றும் நடுத்தர வகையைச் சேர்ந்த 50 மோட்டார்கள் அவர்களிடம் இருந்தன.

ஆனால் தற்போதைய நான்காவது ஈழப்போரில் அவர்கள்

122 மி.மீ களமுனை பீரங்கிகள் 22 ஐயும்,

இரு 152 மி.மீ நீண்டதூர பீரங்கிகளையும்,

80 கனரக 120 மி.மீ மோட்டர்களையும்,

டசின் கணக்கிற்கு மேற்பட்ட 81 மி.மீ மற்றும் 60 மி.மீ மோட்டார்களையும்
கொண்டுள்ளனர்.

மேலும் அவர்களிடம்

ஏறத்தாழ ஆறு 130 மி.மீ பீரங்கிகளும் உள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த பீரங்கிகள் அனைத்தும் சீனத் தயாரிப்பாகும்.

எனினும் இதில் உள்ள ஆச்சரியமான விடயங்கள் என்னவெனில் சிறிலங்கா இராணுவம் பயன்படுத்தும் 120 மி.மீ எறிகணைகளின் பிரத்தியோக தொடரிலக்கமுடைய எறிகணைகளை ஏவக்கூடிய மோட்டார் ஏவுகருவிகளை விடுதலைப் புலிகள் கொள்வனவு செய்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் எவ்வாறு சிறிலங்கா இராணுவத்தினர் பயன்படுத்தும் வகையை ஒத்த மோட்டார்களை கொள்வனவு செய்தனர் என்பது தொடர்பான உயர்மட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசின் ஆயுத முகவர் விடுதலைப் புலிகளின் 120 மி.மீ மோட்டார் கொள்வனவுக்கும் உதவியுள்ளாரா என்பது தொடர்பான விசாரணைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதில் இராணுவத்தின் பங்களிப்புக்கள் இருக்கலாம் அதாவது அவர்களின் கையிருப்பில் இருந்து கைமாறியிருக்கலாம் என்பதற்கான சாத்தியங்கள் இல்லை. ஏனெனில் இந்த சந்தேகங்களை ஆயுதங்களின் கையிருப்பு விபரம் விரைவாக தெளிவுபடுத்திவிடும்.

விடுதலைப் புலிகளின் இந்த பீரங்கிப் பலம் நான்காம் ஈழப்போரில் தெளிவாக வெளிப்படும்.

2001 ஆம் ஆண்டு யாழ். குடாவை காப்பாற்றியதற்கு இராணுவம் பல்குழல் உந்துகணை செலுத்திகளுக்கு நன்றியை தெரிவித்தாலும், விடுதலைப் புலிகளிடமும் சிறிய ரக பல்குழல் உந்துகணை செலுத்திகள் உள்ளன.

விடுதலைப் புலிகளிடம் பெருகியுள்ள பீரங்கிகள், மோட்டார்கள், எறிகணைகள் என்பன அவர்கள் நீண்ட காலத்திற்கு போர் புரிய போதுமானது.

போர்நிறுத்த காலத்தில் இந்த கனரக ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டு, கப்பல்கள் மூலம் எடுத்து வரப்பட்டு, தரைகளில் இறக்கப்பட்டதுடன் காட்டுப்பகுகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. பீரங்கி மற்றும் மோட்டார் எறிகணைகளுடன் விடுதலைப் புலிகளின் கப்பல்கள் கண்டறியப்பட்ட போது அவை அரசின் கைகளில் வீழ்வதை தடுக்கும் பொருட்டு அவர்களே தமது கப்பல்களை தகர்த்தும் உள்ளனர்.

முக்கியமாக அனைத்துலகத்தில் தமது பெயரை இழக்க நேரிடலாம் என்பதும் அதற்கான காரணம்.
இராணுவத்தின் கிழக்கு மீதான நடவடிக்கையின் போது விடுலைப் புலிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பீரங்கிகளை பயன்படுத்தியிருந்தனர். அதற்கு தமது வளங்களை இழந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். இராணுவத்தினரால் கிழக்கு கைப்பற்றப்பட்ட போதும் பெரும் சமர் ஒன்றிற்காக இந்த தரமான நவீன ஆயுதங்கள் எண்ணெய்கள் இடப்பட்டு பெருமளவில் வேறு இடத்தில் அவர்கள் சேமித்து வைத்துள்ளனர்.

கனரக ஆயுதங்களின் தரமான பிரயோகம் இந்த போரின் இரண்டாவது நிலையில் நடைபெற்றும் உள்ளது. விடுதலைப் புலிகள் பீரங்கிகளை கொள்வனவு செய்த போதும் டாங்கிகளை கொள்வனவு செய்யவில்லை. எனினும் அதற்கான சிறந்த தெரிவாக டாங்கி எதிர்ப்பு படைப்பிரிவை உருவாக்கியுள்ளனர்.

போர்நிறுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் டாங்கி எதிர்ப்பு படைப்பிரிவு கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்திருந்தது. அந்த படையணியின் பயிற்சி முடிந்து வெளியேறும் நிகழ்வுகளில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் பங்குபற்றியிருந்தார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முகமாலையில் இரு மணிநேரம் நடைபெற்ற சமரின் போது சிறிலங்கா இராணுவம், செக்கோஸ்லாவாக்கிய நாட்டுத் தயாரிப்பான இரு ரி-55 களமுனை டாங்கிகளையும், 4 அல்லது 5 உக்கிரேய்ன் நாட்டுத் தயாரிப்பான பிஎம்பி ரக தாக்குதல் கவச வாகனங்களையும் இழந்திருந்தது.

விடுதலைப் புலிகள் தமது இலகுரக வானூர்திகளையும் இரண்டுக்கும் மேற்பட்ட முறை கொழும்பிலும், வடக்கிலும் தாக்குதலுக்கு பயன்படுத்தியிருந்தனர். அது போரிற்கு மற்றுமொரு பரிமாணத்தை சேர்த்திருந்தது.

அவர்களிடம் எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அது தரைத் தாக்குதலின் அவர்களுக்கு உதவலாம்.
கிழக்கிற்கு விடுதலைப் புலிகள் தரையில் இருந்து வானுக்கு ஏவும் மூன்று ஏவுகணைகளை எடுத்து வந்ததாக இராணுவத்தினருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதில் ஒன்றை உலங்குவானூர்தி ஒன்றை சுட்டுவீழ்த்த அவர்கள் பயன்படுத்தி இருந்தனர். மற்றதை வன்னிக்கு கொண்டு சென்று விட்டனர். ஏவுகணைகளை கொண்டு செல்லும் விடுதலைப் புலிகளை தாக்குவதற்கு இராணுவம் பெரும் எடுப்பிலான தேடுதலை நடத்தியிருந்தது எனினும் அவர்களால் விடுதலைப் புலிகளை இடைமறிக்க முடியவில்லை.

ரஸ்யத் தயாரிப்பான இந்த ஏவுகணைகள் மூலம் 20,000 அடி உயரத்தில் பறக்கும் வானூர்திகளை சுட்டுவீழ்த்த முடியும் என இராணுவத்தினர் நம்புகின்றனர். தோளில் வைத்து இயக்கப்படும் இந்த ஏவுகணைகள் ஒவ்வொன்றும் 2.8 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியானவை.

முன்னர் பல வானூர்திகளையும் உலங்கு வானூர்திகளையும் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தியிருந்தனர். கொக்கிளாய் நீரேரியில் எம்ஐ-24 தாக்குதல் உலங்குவானூர்தி, மற்றும் பலாலியில் 1995 ஆம் ஆண்டு இரு அவ்ரோ வானூர்திகள் ஆகியவற்றை விடுதலைப் புலிகள் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியிருந்தனர்.

அவ்ரோ, புக்காரா, மற்றும் பல எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகளை அவர்கள் வெற்றிகரமாக தாக்கியழித்த போதும் 2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா வான்படைத்தளத்தில் கிபீர், மிக், கே-8 போன்ற வான்கலங்களையும் அழித்திருந்தனர். எனினும் தற்போதைய ஈழப் போரில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது சிறிலங்கா வான் படையினர் பெருமளவான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அதிக உயரத்தில் பறந்து தாக்குதல்களில் ஈடுபடும் மிக்-27 மற்றும் கிபீர் ரக வானூர்திகளை சாம்-14 ஏவுகணைகளின் மூலம் வீழ்த்த முடியாது. எனவே சாம்-18 ரக வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய விடுதலைப் புலிகள் முயன்று வருகின்றனர். எனினும் தமது இலகுரக வானூர்திகளின் மூலமும் சிறிலங்கா வான்படையின் வானூர்திகளை தாக்க முயன்றுள்ளனர். அந்த தாக்குதலில் இருந்து கிபீர் வானூர்திகள் மயிரிழையில் தப்பியுள்ளன.

விடுதலைப் புலிகளின் தற்போதைய கனரக ஆயுதங்கள் மிகவும் சவாலானவை. ஆழ ஊடுருவும் சிறப்பு படையணிகள் அந்த ஆயுதங்களின் இருப்பிடங்களை கண்டறிவதிலும் மற்றும் ஆளில்லாத உளவுவானூர்திகளின் இலத்திரனியல் உளவுத் தகவல்களிலுமே வான் படையினரின் தாக்குதல் தங்கியுள்ளது.

புலிகளின் பீரங்கி நிலைகளை கண்டறியும் சாதனம்.

மேலும் விடுதலைப் புலிகளின் மோட்டார் மற்றும் பீரங்கி நிலைகளை கண்டறியும் சாதனத்தையும் இராணுவத்தினர் கொள்வனவு செய்துள்ளனர்.

ஏஎன்-ரிபிகியூ-36 சூடுநிலை அறியும் ராடார் சாதனம் (AN/TPQ- 36 Firefinder weapon locating radar) எனப்படும் இந்த சாதனம் மிகவும் அதிக பெறுமதியானது.

மிகவும் அதிக பெறுமதி மிக்க தன்னியங்கித் தொழில் நுட்பமுள்ள இந்த சாதனம் கிடையாக 90 பகையில் ஒரு செக்கனுக்கு பல முறை இலத்திரனியல் தேடுதல்களை மேற்கொள்ளக் கூடியது. அதன் போது எதிர்த்தரப்பு பீரங்கி நிலைகளை தன்னிச்சையாகவே கண்டறியக் கூடியது.


பின்னர் அதன் அமைவிடம் தொடர்பான தரவுகளை கணணிக்கு வழங்கும். அதனை ஆய்வு செய்த கணிணிகள் பீரங்கி நிலைகளின் அமைவிடப் புள்ளிகள், உயரம் தொடர்பான தகவல்களை தாக்குதலாளிக்கு வழங்கும்.

இந்த தன்னியக்க தொழிற்பாடானது மிகவும் வேகமானது. அதவது எதிரி தமது நிலைகளை மற்றுவதற்கு முன்னர் பீரங்கி நிலைகளின் அமைவிடப் புள்ளிகள், உயரம் தொடர்பான தகவல்களை தாக்குதலாளிக்கு அது வழங்கிவிடும்.

இந்த சாதனமானது 90 பாகைகளை விட 360 பாகையிலும் கெரில்லா எதிர்ப்பு நடைவடிக்கைகளில் பயன்படுத்தலாம்.

இதில் உள்ள ராடாரானது எதிரியின் பீரங்கி நிலையின் அமைவிடத்தை துல்லியமாக கணிப்பிட உதவும் செயற்பாட்டை கொண்டது. எதிர்ப்புச் சூடுகளை வழங்கும் மையம் ராடார்களால் வழங்கப்படும் தரவுகளை ஆராய்ந்து தமது தாக்குதல்களையும் நெறிப்படுத்த இது உதவும்.

பீரங்கிகளை கண்டறியும் தூரவீச்சை பொறுத்தவரை ஏஎன்-ரிபிகியூ-36 சூடுநிலை அறியும் ராடார் (AN/TPQ-36) சாதனங்களை விட ஏஎன்-ரிபிகியூ-37 சூடுநிலை அறியும் ராடார் (AN/TPQ-37) சாதனம் சிறப்பானது.

அதன் அதிகுறைந்த தூரவீச்சு 3 கி.மீ, அதிகூடிய தூரவீச்சு 30 கி.மீ ஆகும். உந்துகணைகள் எனில் அவை 50 கி.மீ அதிகூடிய தூரவீச்சை கொண்டவை.

இந்த இரு சாதனங்களுக்கும் வேறுபட்ட கணணி மென்பொருட்களை (computer software) பயன்படுத்தினாலும் அவற்றின் இயங்கு முறைகள் ஒரே மாதிரியானவை. எனினும் இது இராணுவத்தினரின் தேவைகளில் தங்கியுள்ளது. AN/TPQ-37 போன்ற நவீன சாதனங்களை கொள்வனவு செய்வது உகந்தது. இவை மிகவும் குறுகிய தூர, அதிக தூர மற்றும் குறைந்த பாகை, உயர்பாகை ஆகியவற்றில் உள்ள இலக்குகளை கண்டறியக்கூடியது. அதவது AN/TPQ-36 விட சிறந்தது.

AN/TPQ-36 பீரங்கி நிலைகளை கட்டறியும் சாதனம் தொடர்பான சில தகவல்கள்.

இதனை இயக்குவதற்கு 8 இராணுவத்தினர் தேவை.

அதன் முதன்மையான செயற்பாடு எதிரிகளின் மோட்டார், பீரங்கி, உந்துகணை செலுத்திகளின் சூடு நிலைகளை அறிதல்.

அதன் ராடார்கள் நேரடியற்ற உயர் பாகைச் சூடுகளை கண்டறியக்கூடியவை அதே போலவே மிகவும் குறைந்த பாகைகளை உடைய நேரடியற்ற சூடுகளையும் கண்டறியக் கூடியவை.

அதன் இரண்டாம் நிலை செயற்பாடானது படையினரின் சூடுகளை கண்காணித்தலாகும்.

இதன் மூலம் விடுதலைப் புலிகளின் பீரங்கிகள் கண்டறியப்பட்டதும் அதன் மீதான தாக்குதல்கள் நடத்தி அவர்களின் தாக்குதலை முறியடிக்கலாம். எனினும் வடக்கிலும், கிழக்கிலும் நடைபெற்ற பல சமர்களில் விடுதலைப் புலிகள் பீரங்கிகளை மிகவும் திறம்பட பயன்படுத்தியிருந்தனர்.

எனவே விடுதலைப் புலிகளின் பீரங்கிப் பலம் இந்த போரின் சமநிலையை மாற்றி அமைக்கும் தன்மையை கொண்டவை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

” தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் “

மூலம் : தமிழீழ இணைய ஊடகம் ( 2007 )

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us