ஈழம்

ஈழம்

செவ்வாய், 4 மார்ச், 2014

கரும்புலி லெப் கேணல் சுபேசனின் வீர வரலாற்று நினைவுகள்.


கரும்புலி 
லெப்.கேணல் சுபேசன்
மருசலின் அல்வின்
தமிழீழம் மன்னார் மாவட்டம் 
தாய் மடியில் :02-07-1971
தாயக மடியில் :01-02-1998 

விழுதெறிந்த விருட்சத்தின் வெளித்தெரியா வேர்கள் …

இவனின் குடும்ப விருட்சம் – ஒரு அண்ணனும் மூன்று அக்காவும் , நான்கு தம்பியும் , ஒரு தங்கையும் .

நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. அந்த இரவின் அமைதி குலைந்து நீண்ட நேரமாகிவிட்டது. கருமை பூசியிருந்த இருளினை இடையிடை முழங்கிய துப்பாக்கி , குண்டுகளின் வெளிச்சம் சீர்குலைத்துக்கொண்டிருந்தது.


எதிரியின் பலமான தடைகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த எமது கரும்புலி அணிகள் தாக்குதல்களை வேகப்படுத்தின. நாங்கள் தேடிச்சென்ற இலக்குகள் குறித்த நேரத்திற்குள் தகர்த்தெறியப்பட்டன. இலக்குகளை அழித்தும் கரும்புலி மேஜர் குமுதனிடம் இருந்து பின்வாங்கும்படி கட்டளை கிடைத்தது.

நாங்கள் பின்வாங்குவதற்க்கான வியூகங்களை ஏற்படுத்தி வேகமாகப் பின்வாங்கத் தயாரானோம். ஆனால் எங்கள் அணியினைப் பொறுப்பேற்று வந்திருந்த சுபேசனிற்க்கு காலிலும் , நெஞ்சிலும் குண்டு பாய்ந்திருந்தது. எங்களுடன் சேர்ந்து சுபேசனால் பின்வாங்க முடியவில்லை. தூக்கிக்கொண்டு வந்தாவது அவனைக் காப்பாற்றுவோம் என முயற்சித்தோம். அந்த நிலையில் அது சாத்தியப்படாத காரியம்.

” என்னைப் பார்த்து நிற்காதீர்கள். என்னைத் தூக்கிக்கொண்டு பின் வாங்க இயலாது. நீங்கள் போங்கோ ”

சுபேசன் எங்கள் எல்லோரையும் , பார்த்து எதுவித கலக்கமும் இல்லாது உறுதியாக இறுதி விடை தந்தான்.

எப்படி அவனைப் பிரிந்து போவது , எங்களுக்கு அது கஸ்ரமாக இருந்தது.

” நீங்கள் நிறையச் சாதிக்க வேண்டியனீங்கள். என்னைப் பார்த்து நின்று வீணாய் காயப்படாதீர்கள் தயவுசெய்து போங்கோ ….. நான் சாஜ்சரை இழுக்கப்போறேன்….. ”

இப்பொழுது நாங்கள் அவனைப் பிரிந்து போனால் இன்னும் ஒருசில வினாடிகளுக்குள் அங்கே சம்பவிக்கப்போகும் அந்த நிகழ்வு நினைத்துப்பார்க்கவே உயிரைப் பிளிந்தது.  இனி என்றுமே , எப்பவுமே அவனைப் பார்க்கவோ அவனோடு பேசவோ முடியாது.

அப்படி ஒரு நிகழ்வு இங்கே நடக்குமானால்…..   எண்ணிக்கொள்ளவே நெஞ்சு கனத்தது.   “  சுபேசன் வீரச்சாவடைந்துவிட்டான் ” என்று எப்படி அவன் தங்கையிடம் போய்ச்சொல்வது. அதை அவள் எப்படித் தாங்கிக்கொள்ளப்போகிறாள்….?

” சுபேசன் தங்கை மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தான். என்ன மாதிரி எல்லாம் நேசித்தான். சின்ன வயதில் இருந்து ஒருவர்மேல் ஒருவர் அளவில்லாத பாசம் வைத்து வளர்ந்தவர்கள். தாய் – தந்தையிலோ , மற்ற சகோதரர்களிலோ வைத்த பாசத்தை விட சுபேசன் மீது அதிக பாசம் வைத்திருந்தாள் அவள்.

நாங்கள் சீனன்குடாத் தாக்குதலுக்காக பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த வேளை….

சுபேசனின் தங்கையை யாரோ ஒருவன் கடத்திச் சென்றான். சுபேசன் துடித்துப்போய் ஓடிச்சென்று தங்கையைக் காப்பாற்றுகின்றான். இருந்தாலும் தலையில் பலமாக அடிபட்டு மயங்க்கிவிடுகிறாள். மயங்கிய தங்கையை கைகளில் சுமந்து , பின் ஓரிடத்தில் தண்ணீர் தெளிக்கவே அவள் மயக்கம் தெளிந்தாள். ”

இப்படி ஒரு கனவினைக் கண்டுவிட்டு அவன் நிஜமாகவே துடித்துப்போய் விட்டான். நித்திரையில் திடுக்கிட்டு விழித்தவனுக்கு மறுபடியும் தூக்கம் வரவில்லை. தங்கையின் நினைவுகளே சுற்றி சுற்றி அவன் கண்களுக்குள் நுழைந்தன.

விடிந்ததும் தங்கையிடம் சென்று அவளைப் பார்த்து தான் கண்ட கனவினை அவளோடு கதைத்த பின்னர்தான் அவனின் மனம் ஆறுதலானது. இரவு கனவு கண்டுவிட்டு எழுந்து போராளிகளிடம் கூறும்போது எவ்வளது துடித்தான்.  கனவிலேயே தங்கை படும் கஸ்ரத்தைக் கண்டுவிட்டு தங்கைக்கு என்னவோ – ஏதுவோ என ஏங்கிய அவனது உணர்வுகள் தங்கையை இறுதியாய் பிரிகின்றவேளை எப்படி இருந்திருக்கும் , அவனின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்….!

ஆனையிறவுப் படைத்தளமே எமது இலக்கிற்கான இடம். எமது முகாமில் இருந்து நாங்கள் புறப்பட்ட அந்த இறுதி நேரம்…..

நாங்கள் எல்லோரும் வாகனத்தில் ஏறி அமர்ந்து விட்டோம். இன்னும் சில வினாடிகளில் வாகனம் புறப்பட்டுவிடும். இறுதியாய்ப் பிரிகின்ற அந்தக்கணம் – எல்லோரும் மாறி மாறி விடைகொடுத்துக்கொள்கின்றோம். இந்த இருதியான் விடைகொடுப்பு யார் யாருக்கு நிரந்தரமாய் போகும் சர்ந்தப்பம் கிடைக்குமோ தெரியாது. என்றுமே , எப்பவுமே இனிக்கான முடியாத அந்தப் பிரிவு நிகழ்ந்த வேளை……

சுபேசனை விட்டு பிரிந்திருக்க முடியாது இயக்கத்திற்கு வந்த அவனது பாசத்தங்க்கையும் அங்கே நிற்கின்றாள். இன்னும் ஒன்றோ – இரண்டோ வினாடிகளில் அவன் புறப்படப்போகின்றான். அந்த ஒரு சில வினாடிகளைக் கூட தங்கையுடனேயே பேசிக்கழித்தான்.

இரண்டு பெருநதிகள் ஓடிவந்து கலக்குமே ஓர் இடம்… அங்கு எழுகின்ற ஆர்பரிப்பினைப் போன்று இரண்டுபேர் மனதிற்குள்ளும் எத்தனையோ மனக்குமுறல்கள் , என்னால் சொல்ல முடியவில்லை.

போராளிகளுடன் சிறிதுகாலம் பழகிப் பிரியும்போது கூட தாங்கிக்கொள்ள முடியாத சுபேசன் , நினைவு வந்த நாளில் இருந்து உயிராய் நேசித்த தங்கையின் பிரிவை எப்படித்தான் தாங்கிக்கொள்ளப்போகின்றான்.

தங்கைக்கு தெரியும் அண்ணன் கருபுலி என்று. இப்பவும் கரும்புலித் தாக்குதல் ஒன்றிற்குத்தான் போகின்றான்…. போனான்….

சீனன்குடாவில் இலக்குகளை அழித்துவிட்டு வந்தமாதிரி இந்தச்சண்டையிலும் இலக்கு அழித்துவிட்டு அன்னான் திரும்பி வரமாட்டானா…?….!  அவளது மனம் பிராத்தித்தது.

உயிரோடு ஒட்டிய உறவல்லோ. சுபேசனிற்க்கும் வேதனையாகத்தான் இருந்தது. தங்கையின் கண்ணீரத்துடைத்து  ” அழக்கூடாது ” தலைவர் இருக்கிறார்.  கவலைபடக்கூடாது “  தங்கையிற்கு அறிவுரை சொல்லி , ஆறுதல் வார்த்தைகள் கூறி எவ்வளவோ மனப்போராட்டத்தின் மத்தியில் பிரிக்க முடியாத பின்னிப்போன உறவைப் பிரித்துக்கொண்டு வாகனத்தில் ஏறி அமர்ந்துகொள்கிறான்.

அவன் அண்ணனுக்கு கையசைத்தாள். அவனும் கையசைத்தான். வினாடியாகளிக் காலம் மிக வேகமாக விழுங்கிக்கொண்டது.  தங்கையின் விசும்பல் காதில் கேட்கிறது.  தங்கையின் சிறு கலக்கத்தைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாத சுபேசனிற்கு எப்படி இருந்ததோ.

வாகனம் மெல்ல மெல்ல நகரத்தொடங்குகின்றது.  மீண்டும் ஒரு தடவை தங்கையைப் பார்த்துவிட வேண்டுமென ரோச்சடித்துத் தங்கையைப் பார்க்கிறான். தங்கையின் முகம் தெரிகின்றது.  அவளின் வாட்டத்தைக் கண்டது , அவளிற்கு ஆறுதல் சொல்லவேண்டும் போல துடித்தது அவன் மனம். வாகனம் மெல்ல மெல்ல வேகம் கூடியது. பிரிவைத் தாங்க முடியாத சுபேசன் தலை கவிழ்ந்து கொள்கிறான்.

இந்த இறுதி நேரம் அவன் உணர்வுகள் எத்தனை தடவை சிலிர்த்திருக்கும் இவ்வளவு பாசமான் உறவினைவிட இந்தத் தேசத்தின் மீதும் மக்களின் மீதும் எவ்வளவு உன்னதமான பற்று வைத்திருக்கின்றான். அவனது இலட்சியம் எவ்வளவு புனிதமானது.  அவன் தன் தேசத்தில் எல்லோரையும் ஆழமாக நேசித்தான். அதனால்த்தான் அவர்களின் துயரத்தைக்கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல் கரும்புலியானான்.  அடுத்தவர் துயரத்திற்கு தோள்கொடுக்கவும் , மற்றவர்களின் வேதனைக்காக கண்ணீர் சிந்தவும் பழகிய இதயம் அவனது இதயம்.  தலைவர் ஒரு போராளியை எப்படியெல்லாம் எதிர்பார்த்த்தாரோ அத்தனியும் பிரதிபலிப்பதாகத் திகழ்ந்தான்.

1993ம் ஆண்டு தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைத்துக் கொண்டவன் சுபேசன்.  இன்றுவரை எத்தனை ஆண்டுகள் மனம் சலிக்காது கொள்கை ஒன்றையே நெஞ்சில் சுமந்து எவ்வளவு கடுமையான பயிற்சிகளை எல்லாம் எடுத்திருப்பான். இறுதி மூச்சிலே பகை எரிக்க அந்த இலக்கு கிடைக்கும்வரை இத்தனை வருடங்கள் காத்திருந்தானே….!  அவனது இலட்சியம் எத்தனை பெரியது.

அவனிற்கு உடம்பில் ஏராளமான காயங்கள். 1994ம் ஆண்டு காலப்பகுதியில் ஆனையிறவுப்படைத்தளம் மீதான் கரும்புலித் தாக்குதல் ஒன்று செய்வதற்கான இறுதி வேவிற்கு சுபேசன் சென்றிருந்தான்.  அன்று எதிரியுடன் மோத நேர்ந்தது.  சுபேசனிற்கு கையில் பெரிய காயம். அன்று ஏற்ப்பட்ட காயத்தினால் இன்றும் பெரிய வேலைகள் செய்தால் கைமூட்டுக்கள் கழன்றுவிடும்.  பின் அவன் தானே கைமூட்டைக்கொழுவி தன் பணிகளை செய்துகொள்வான்.   எல்லா ஆயுதங்களையும் சிறப்புற இயக்கம் தேர்ச்சி பெற்றதோடு சிறந்த சூட்டு வல்லமையும் கொண்டவன். எந்த ஒரு இருக்கானாம சூழ்நிலையிலும் நன்கு திட்டமிட்டு அணிகளை சிறந்தமுறையில் வழிநடத்தக் கூடியவன். சீனன்குடாவில் எதிரி வானூர்திகளையும் , கனரக ஆயுதங்களையும் அழித்த கரும்புலி அணிகளுக்கு சுபேசனே தலைமையேற்றுச் சென்றிருந்தான்.

அன்றொருநாள் ஆகாயக் கடல்வெளித் தாக்குதலை முறியடிப்பதற்காக வெற்றிலைக்கேணியிலிருந்து ஆனையிறவுக்கு சிங்கள இராணுவம் பெரிய நகர்வு ஒன்றினை மேற்கொண்டது. அதற்க்கு ஊடறுப்புத்தாக்குதல் மேற்கொள்ள நின்ற எமது அணிகளுடன் ஒன்றாக சுபேசனும் 05 பேர் கொண்ட வேவு அணியுடன் நின்றான். முதல் நாள் சுபேசனும் சென்று வேவு பார்த்துவிட்டு வந்திருந்தான். அடுத்தநாள் ஊடறுப்புத் தாக்குதலுக்குத் திட்டமிடும் வேலை இருந்தமையால் சுபேசன் வேவுக்குச் செல்லாது முகாமில் தங்கிக்கொள்கிறான். சண்டைச் சூழ்நிலை காரணமாக உணவு விநியோகம் பெரிது சீர்குலைந்திருந்தது. எப்போதாவது வரும் சாப்பாட்டை சாப்பிடுவது , சாப்பாடு வராவிட்டால் சாப்பாட்டை எதிர்பார்க்காது தத்தமது கடமைகளை செய்யவேண்டிய ஒரு சூழ்நிலையே இருந்தது.  அன்று சாப்பாடு வந்திருந்தது ஆனால் , அங்கே நின்ற ஆட்களை விட வந்திருந்த சாப்பாடுப் பொட்டலங்கள் குறைவானதாக இருந்தது.  05 பேர் கொண்ட சுபேசனின் அணிக்கு இரண்டு சாப்பாட்டு பொட்டலங்கள் கிடைத்தன.

தனது தோழர்கள் வேவு பார்த்துவிட்டு களைத்துப்போய் வருவார்களே அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவோம் என எண்ணியவன் அந்த உணவுப்பொட்டலங்களை துணி ஒன்றினால் சுற்றி கவனமாக வைத்துவிட்டு படுத்துவிடுகின்றான்.. அவன் முதல்நாள் சாப்பிட்ட சாப்பாடுதான்….. அன்று மதியம் கழிந்துகொண்டிருந்தது. இந்தளவு நேர இடையிற்க்குள் ஒன்றோ இரண்டு இளநீர் குடித்துவிட்டான். படுத்திருந்த சுபேசனிற்கு வேவு பார்க்கச் சென்ற தோழர்கள் வருகின்றார்கள் என்ற செய்தி காதில் எட்ட , நித்திரை விட்டு எழுகின்றான். எழுந்திருந்தவன் உடனே தான் எடுத்து வைத்திருந்த சாப்பாட்டுப் பொட்டலங்களைப் பார்க்கின்றான். பொட்டலங்களைக் காணவில்லை….  யாரோ அந்தச் சாப்பாட்டுப் பொட்டலங்களை எடுத்து சாப்பிட்டுவிட்டார்கள் பொங்கி வந்த அழுகையினை சுபேசனால் அடக்கிக்கொள்ள முடியவில்லை. உணவு இருக்கும் என்ற நம்பிக்கையோடு வருவார்களே தன் தோழர்கள் அவர்களுக்கு என்னவேன்று சாப்பாடு இல்லைஎனச்சொல்வது ….. அவன் துடித்துப் போனான்.

முதல் நாள் மதியம் சாப்பிட்ட சாப்பாட்டுடன் சென்று களைத்துப்போய் வருகிறார்களே எப்படி பசியைத் தாங்கிக்கொள்ளப் போகிறார்கள்.  அவர்களிற்கு ஒருவேளை உணவு கூட கொடுக்கமுடியவில்லையே  என கலங்கினான்.  அவனது மனவேதனை கண்களால் வெளியேறிக்கொண்டிருந்தது. பெற்ற பிள்ளைகள் பசியில் துடிப்பதைப் பார்த்து ஒரு தாய் அழுவாளே அதே மாதிரி அழுதான் எங்கள் சுபேசன். அவன் தோழர்கள் எவ்வளவு சமாதானப் படுத்தியும் சுபேசனின் அழுகை தீருவதாக இல்லை. நின்ற வேறு தோழர்கள் அங்கு தேடி , இளநீர்களைப் பிடுங்கிக்கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்து சுபேசனிற்கு கொடுத்தபோதும் அவன் குடிப்பதாக இல்லை.

“  என்ற பெடியள் சரியான பசியாய் இருப்பாங்கள் அவர்களுக்கு கொடுங்கோ எனக்கு வேண்டாம் ” அவன் மறுத்தே விட்டான். இப்படித்தான் என்றும் தன்னைவிட பிறரை நேசிக்கும் மனம் அவனிற்கு….

நான் கடைசியாகச் சிரித்து அவனோடு பேசிய அந்த இறுதியான அந்த நேரமே இவனது உணர்வுகள் எவ்வளவு புனிதமாக இருந்தது.

ஆனையிறவு படைத்தளத்திற்குள் ஊடுருவி முதலாவது தடை தாண்டியாகிவிட்டது. தாக்குதல் ஆரம்பிக்க இன்னும் ஒரு சில மணித்தியாலங்கள் இருந்தது.  இறுதியாக நாங்கள் பழரின்களையும் , உளர் உணவுகளையும் சிரித்து கலகலப்பாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.  சுபேசன் மட்டும் ஒவ்வொரு போராளியின்  மனத்தையும் பாசமாய்ப் பார்த்தான். அவனது முகத்தில் லேசாக சோகம் படர்ந்திருந்தது. இன்னும் ஒரு சில மணித்தியாலத்திற்குள் வெடிக்கப்போகும் அந்த சுபேசன் என்ன சொன்னான் தெரியுமா……?

” பார் மச்சான் எவ்வளவு சிரிப்பு கலகலப்பாக இருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில்…..   …. ” அவனால் அதற்குமேல் எதுவும் பேசமுடியவில்லை.  தீயிர்க்குள் இருந்து நீர் வடியும் உணர்வு அவனுக்கு.  அவன் தனியாக இலக்கை அழிக்க சென்றிருந்தால் கவலைப்படட்டிருக்க மாட்டான். தன்னுடன் சேர்ந்து கூடிக் கும்மாளம் போட்டுப்பழகிய இந்த வீரர்கள் இன்னும் சில மணி நேரத்தில் காவியங்களாகப் போகின்றார்களே…! என்ற ஏக்கம்தான் அவனுக்கு.  தன்னை அழிக்கத் துணிந்த அந்த வீரன் இறுதி நேரத்தில் இப்படி ஏங்கினான் என்றால் , அவன் மற்றவர்களின் வாழ்வை , மற்றவர்களை எப்படி உன்னதமாக நேசிக்கின்றான். இப்படி எல்லோரிலும் பாசம் வைக்கும் சுபேசன் இயக்கத்திற்கு வந்ததும் , அண்ணனைப் பிரிந்து வாழமுடியாது என்று அண்ணனுடன் கூட இருப்பதற்காக இயக்கத்திற்கு வந்தாலே அவன் தங்கை. அவள் மீது எவ்வளவு பாசம் வைத்திருப்பான்.

தன் தங்கை மீதும் , எம் தேசம் மீதும் ஒவ்வொரு மக்கள் மீதும் , எங்கள் தலைவன் மீதும் எவ்வளவு பாசம் வைத்திருந்தானோ அதுதான் அவனை ஒரு உன்னத கரும்புலி வீரனாக்கியது.

சண்டைகளின் சீறல் இன்னும் அடங்கியதாய் இல்லை. தொடர்ந்து வெடிமுழக்கம்.

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ” சுபேசன் அழுத்தமாக உரைத்தது வானில் எதிரொலித்தது. எப்போதுமே மற்றவர்களிற்க்காக சுவாசித்துப் பழகிப்போன அவனது மூச்சு நிட்சயம் எம் தேசத்தை வாழவைக்கும்.


கரும்புலியாய் இணைந்து கொள்ள முன் பங்குபற்றிய தாக்குதல்கள்…

* ஆகாய கடல்வெளிப் பெருஞ்சமர்.


* மின்னல் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான சண்டை, கொக்குத்தொடுவாயில் மேற்கொள்ளப்பட்ட பதுங்கித் தாக்குதல்.


* சின்னமண்டலாய்ப் பகுதியில் மேற்கொண்ட காவலரண் அழிப்புச்சண்டை.


* கட்டுப்பத்தை இராணுவ முகாம் தாக்குதல்


உயிராயுதம் பாகம் : 07 ல் இவ் தேசத்தின்புயல்களின் உயிரோட்டம் 05:52 – 15:59 வரை…


இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

                       Image Hosted by ImageShack.us

விடுதலைபுலிகள் இதழ் ( சித்திரை – வைகாசி : 1999 )
இணைய தட்டச்சு உரிமம் தேசக்காற்று.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us