ஈழம்

ஈழம்

புதன், 18 ஜூன், 2014

தமிழீழ விடுதலை புலிகளிடம் போராடி தோற்ற இந்திய படைகள் பாகம் 10

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நேருக்கு நேர் மோத முடியாமல் தோற்றுப்போன இந்திய படைகள் பின்பு உதவிக்கு இலங்கை படைகளை அழைத்தார்கள். 

சிங்களத்தில் பேசிய இந்தியப் படையினர்...

இந்தியப் படையினர் ஈழ மண்ணில் நிலைகொண்டிருந்த காலங்களில் நடைபெற்ற அவலங்கள் பற்றி இந்தத் தொடரில் விரிவாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். 

 அந்தக் காலகட்டங்களில் ஈழத் தமிழர்; மீது இந்தியப் படைகள் மேற்கொண்ட படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் பாலியல் வல்லுறவுகள் என்பன பற்றியும் இந்திய அமைதி காக்கும் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சண்டைகள் மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் பற்றியும் இந்தியப் படையினருடன் சேர்ந்தியங்கிய தமிழ் ஆயுதக் குழுக்கள் தமது சொந்த மக்களுக்கெதிராகப் புரிந்த அட்டுழியங்கள் பற்றியும் சற்று விரிவாக ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம்.

இனி இந்த வார அத்தியாயத்திற்குள் நுழைவோம்..

அக்டோபர் மாதம் 16ம் திகதி உரும்பிராய் பகுதிக்குள் இந்தியப் படையினர் நுழைந்ததைத் தொடர்ந்து அப்பிரதேசத்தின் இந்தியப் படையினர் மேற்கொண்ட மனித வேட்டைகள் பற்றி கடந்த அத்தியாயத்தில் பார்த்திருந்தோம்;.

உரும்பிராய் பிரதேசத்தில் இந்தியப் படையினர் சகட்டு மேனிக்கு சுட்டுக்கொண்டும் குண்டு வீசிக்கொண்டும் தமது நடவடிக்கைகளைத் தொடர்ந்ததால் அங்கிருந்த மக்கள் பயத்தினால் வீடுகளினுள்ளும் வேறு மறைவிடங்களிலும் மறைந்திருக்கவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

அவ்வாறு மறைந்திருந்த பொதுமக்களால் சில விடயங்களை அவதானிக்கவும் முடிந்தது.

உரும்பிராய் பிரதேசத்தைச் சுற்றிவழைத்திருந்த இந்தியப் படையினர் சிங்களப் பாஷையில் பேசிய அதிசயத்தை பல சந்தர்ப்பங்களில் அவர்களால் கேட்கமுடிந்தது.

பொது மக்களுக்கோ ஆச்சாரியம்.  அவர்களால் தங்கள் காதுகளையே நம்பமுடியவில்லை.

இந்திய இராணுவம் சிங்களம் பேசுவதா? ~ஏதாவது கனவு கினவு காண்கின்றோமா| -என்று சந்தேகித்து பலர் தங்களைத் தாங்களே கிள்ளியும் பார்த்துக்கொண்டார்கள்.

பயத்தில் ஹிந்தியை சிங்களம் என்று தவறாகப் புரிந்துகொண்டுவிட்டோமோ என்று கூட அவர்கள் சந்தேகப்பட்டார்கள். படிப்படியாகவே உண்மை நிலையை அவர்களால் விளங்கிக்கொள்ள முடிந்தது.

இந்தியப் படையினருடன் ஸ்ரீலங்காப் படையினரும் இணைந்து மனித வேட்டைக்கு வந்திருந்ததை அவர்களால் உணர முடிந்தது.

இந்தியப் படையனருடன் இணைந்து ஸ்ரீலங்காப் படைவீரர்களும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டதை யாழ் குடாவாசிகள் பலர் உறுதிப்படுத்தியிருந்தார்கள். ~முறிந்த பனை| என்ற தொகுப்பு முதற்கொண்டு இந்தியப்படையினரின் இராணு நடவடிக்கைகள் தொடர்பான சம்பவங்கள் பற்றி வெளியிடப்பட்ட பல புத்தகங்களிலும் இந்தியப் படையினருடன் ஸ்ரீலங்காப் படையினரும் இணைந்து செயற்பட்ட உண்மை உறுதிப்படுத்துப்பட்டிருந்தது.

ஸ்ரீலங்காப் படைகளை துணைக்கழைத்த இந்தியா
புலிகளுடனான சண்டைகள் இந்த அளவிற்கு மோசமானதும் கடினமானதுமாக இருக்கும் என்பதை ஈழ மண்ணில் வந்திறங்கிய இந்தியப் படையினர் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை. புலிகள் மிக இலகுவாக தமது வழிக்கு வந்துவிடுவார்கள் அல்லது புலிகள் இந்தியாவை மீறிச் செயற்படமாட்டார்கள் என்றே அவர்கள் ஆரம்பத்தில் நினைத்திருந்தார்கள்.

ஒருவேளை புலிகளுடன் மோதவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் கூட ஓரிரு நாட்களுக்குள் புலிகளை முற்றாக வெற்றிகொண்டுவிடலாம் என்றே கணிப்பிட்டும் இருந்தார்கள்.

புலிகள் யுத்த முனையில் மிகவும் பலமான எதிர்ப்புக்களைக் காண்பித்து இந்தியப் படையினருக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி இந்தியப் படையினரை எதுவுமே செய்யமுடியாத ஒரு வகை கையறு நிலைக்குள் கொண்டுவந்திருந்ததைத் தொடர்ந்து யாழ்பாணத்தில் தங்கியிருந்த ஸ்ரீலங்காப் படையினரின் உதவியையும் பெறுவதற்கு இந்தியப்படைத்துறைத் தலைமை தீர்மாணித்தது.

இந்திய இராணுவத் தலைமையின் ஆலோசனையின்படி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர். இடம் ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஒத்துழைப்பை கோரியிருந்தார். சந்தர்ப்பம் பார்த்திருந்த ஸ்ரீலங்கா அரசாங்கம் உடனடியாகவே இதற்குச் சம்மதித்தது. ஸ்ரீலங்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அத்துலத் முதலி யாழ் குடாவில் நிலைகொண்டிருந்த ஸ்ரீலங்காப் படையினருக்கு அவசரச் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். புலிகளுக்கு எதிரான இந்தியப் படையினரின் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று அந்த அவசரச் செய்தியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி ஸ்ரீலங்காப் படைகளின் ஒத்துழைப்புக்கள் மிகவும் இரகசியமாக இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்காக ஸ்ரீலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்த ~ஒப்பரரேசன் லிபரேசன்| இராணுவ நடவடிக்கைகளுக்கு என்று தயார்படுத்தப்பட்டிருந்த ஸ்ரீலங்காப் படையணிகள் இந்தியப் படையினருடன் இணைந்து களம் இறக்கப்பட்டன.

இந்தியப் படையினரின் யாழ் நகர் நோக்கிய நகர்வுகளுக்கு ஸ்ரீலங்காப் படையினர் வழிகாட்டிகளாகவும் துனைப் படையினராகவும் பணியாற்றி ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஒப்பரேஷன் லிபரேசன் படைநகர்வுகளுக்கு என்று தயாரிக்கப்பட்டிருந்த யாழ் வீதிகள் தொடர்பான வரைபடங்களையும் இந்தியப் படையினரின் நகர்வுகளுக்கு ஸ்ரீலங்காப் படையினர் கொடுத்துதவினார்கள்.

யாழ் கோட்டையில் நிலைகொண்டிருந்த ஸ்ரீலங்காப் படையினர் யாழ் குடாவிலுள்ள குடியிருப்புக்களை நோக்கி ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டும் ஸ்ரீலங்கா விமானப் படையினரின் ஹெலிக்காப்டர்கள் புலிகளின் இலக்குகள் என்று சந்தேகிக்கப்பட்ட இடங்கள் மீது குண்டு வீச்சுக்கள் நடாத்தியும் இந்தியப் படையினரின் ~ஒப்ரேசன் பவான்| இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தார்கள்.

சாட்சிகள்:
இலங்கை வானொலியில் மிகவும் பிரபல்யமான ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரேடியோ நடராஜா. அவர் அப்பொழுது யாழ்பாணத்தில் தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார். மற்றத் தமிழ் மக்கள் போலவே அவரும் இந்தியா மீது மிகுந்த அபிமாணம் கொண்டிருந்த ஒரு நபர். இந்தியப் படையினர் நகர்வினை மேற்கொண்ட போது அவர்களுடன் பேசிச் சமாழித்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் தனது வீட்டில் தங்கியிருந்தார். அங்கிருந்த மற்றவர்களிடமும் இதனைக் கூறி அவர்களையும் அசுவாசப்படுத்திக்கொண்டிருந்தார்.

இந்தியப் படையினர் அவரது வீட்டினுள் நுழைந்தபோது இந்தியப் படையினருடன் பேசி விளங்கப்படுத்துவதற்காக வாசலுக்குச் சென்றார். இந்தியப் படையினர் அவரை விசாரித்தார்கள். தனது மகனும் மனைவியும் தன்னுடன் இருப்பதாகத் தெரிவித்த அவர் தனது மகனையும் மனைவியையும் வாசலுக்கு வரும்படி அழைத்தார். வீட்டினுள் இருந்த மகன் வெளியே வருவதற்காக எழுந்து நின்று சட்டை அணிந்துகொள்ள முற்படுவதை ஜன்னல் வழியாகக் கண்ட ஒரு சிப்பாய் தனது துப்பாக்கி முனையை ஜன்னலினுள்ளே செலுத்தி சுடத் தொடங்கினான். நடராஜாவின் மகன் தரையில் விழுந்து படுத்துவிட்டதால் துப்பாக்கிச் சன்னங்கள் எதுவும் அவன் மீது படவில்லை.

அதேவேளை வாசலில் இந்தியப் படையினருடன் பேசிக்கொண்டிருந்த நடராஜா மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அவர் பிணமாக வீழ்ந்தார். வாசலிலும் வீட்டினுள்ளேயும் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டதையும் தனது கணவர் மகன் இருவரும் தரையில் வீழ்ந்ததையும் கண்ட நடராஜாவின் மனைவி இருவருமே கொல்லப்பட்டுவிட்டதாக நினைத்து பயத்தில் வீட்டின் பின்பக்கம் வழியாக தப்பி ஓட ஆரம்பித்தார். அவர் பின்பக்கம் வேலி வழியாக தப்பி ஓடவதைக்கண்ட ஒரு சிப்பாய் கத்தினான்: ,பஸ்சங் கியா, (பின்னால் ஓடுகிறார்) என்று அவன் சிங்களத்தில் கத்தியதுதான் இந்தியப் படையினருடன் சிங்களப் படையினரும் இணைந்து வந்திருந்தார்கள் என்பதற்கான முதல் அறிகுறி.

அமெரிக்காவில் இருந்து சாந்தி என்பவர் தனது மகனுடன் விடுமுறைக்கு வந்திருந்தார். இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் யாழ்ப்பாணம் வந்து உரும்பிராயில் தங்கியிருந்தார். 16ம் திகதி அப்பிரதேசத்தில் தொடர்ந்து முழங்கிக்கொண்டிருந்த துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தினால் அச்சமுற்ற அவர்கள் வீட்டினுள் பதுங்கியபடி அந்த இரவைக் கழித்தார்கள். மறு நாள் காலை துப்பாக்கிச் சூட்டு ஒலிகள் சற்று ஓய்ந்ததைத் தொடர்ந்து நிலமையைப் பார்ப்பதற்காக அவர் கதவைத்திறந்து கொண்டு வெளியே செல்ல நினைத்தார்.

கதவை மெதுவாகத் திறந்து வெளியே செல்ல எத்தனித்த போது அவரை முந்திக்கொண்ட அவரது வளர்ப்பு நாய் ஓரளவு திறந்த கதவு வழியாக வெளியே பாய்ந்தது. குரைத்தபடி சென்ற நாயை நோக்கி பல முனைகளில் இருந்தும் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. ஓலத்துடன் நாய் சுருண்டு விழுந்தது. அப்பொழுதுதான் அவரது வீட்டின் அருகே ஒரு கவச வாகனம் நின்றுகொண்டிருப்பதை சாந்தி அவதானித்தார். உடனே வீட்டின் கதவை இறுக அடைத்துவிட்டு தனது மகனையும் இழுத்துக்கொண்டு மீண்டும் வீட்டினுள் ஒரு பாதுகாப்பான இடத்தில் பதுங்கிக்கொண்டார். அந்தச் சமயத்தில் வெளியில் சில சிப்பாய்கள் சிங்களத்தில் பேசியது அவரது காதில் விழுந்தது: மே பரன கெதர. கடாண்ட ஹறி அமாறு. மோட்டார் எக்க உஸ்ஸாண்ட|| (இது பழைய வீடு. உடைப்பது கஷ்டம். ஒரு மோட்டார் அடி) ஆனால் தெய்வாதீனமாக அந்த வீட்டிற்கு எதுவும் நடைபெறவில்லை.

இதேபோன்று யாழ் குடாவில் இந்தியப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்காப் படையினர் ஒத்துழைப்பு வழங்கியதுடன் நேரடியாக பங்குகொண்டும் இருந்ததற்காக பல ஆதாரங்கள் பின்னர் வெளியாகி இருந்தன.

தமது இராணுவ நடவடிக்கைகளின் போது ஸ்ரீலங்காப் படையினர் உதவியது பற்றி இந்தியப் படை அதிகாரிகள் எழுதியிருந்த பல புத்தகங்களிலும் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

ஈழத் தமிழர்களை அழிப்பதற்கு இந்தியப் படையினர் ஸ்ரீலங்காப் இராணுவம் என்ற பேயிடமே உதவி பெற்றிருந்ததானது ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்தியா இழைத்த மிகப் பெரிய துரோகம் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் கிடையாது.


வெட்கமடைந்த இந்தியப் படையினர்:
இந்தியப் படையினர் ஈழத்தமிழர் மீது மேற்கொண்ட மனித வேட்டைகள் எல்லை அற்று தொடர்ந்தவண்ணமே இருந்தன.

ஸ்ரீலங்காப் படைகளைச் சேர்ந்த கொலையாளிகளையும் துணைக்கழைத்துக்கொண்டு யாழ்குடாவெங்கும் மனித வேட்டையில் இறங்கியிருந்த இந்தியப் படையினர் பெண்கள் குழந்தைகள் வயோதிபர்கள் என்று பாராமல் தமிழ்கள் என்று இனங்கண்டுகொண்ட அனைவரையும் படுகொலை புரிந்தபடி முன்னேறிக்கொண்டிருந்தார்கள்.

இவ்வாறு முன்னேறிக்கொண்டிருந்த இந்தியப் படையினரைத் தடுத்து நிறுத்துவதிலும் போரிட்டுக் அழிப்பதிலும்; துரத்தி அடிப்பதிலும் விடுதலைப் புலிகள் தீரம் காண்பித்துக்கொண்டிருந்தார்கள். பல முனைகளிலும் முன்னேறிய ஆயிரக் கணக்கான இந்தியப் படையினரை ஒரு சில போராளிகளைக் கொண்ட புலிகள் அணிகள் தோல்வியடையச் செய்த சந்தர்ப்பங்கள் பல இருந்தன.

ஒரு பனை மரத்தில் பரன் அமைத்து பதுங்கியிருந்த ஒரு விடுதலைப் புலிப் போராளியே இந்தியப் படையின் பாரிய அணி ஒன்றை நாட்கணக்காக தடுத்து நிறுத்தி சாதனை புரிந்த சம்பவங்களும் உள்ளன.

புலிகள் எங்கிருந்து தாக்குதல்கள் நடாத்துகின்றார்கள் என்று இந்தியப் படையினருக்கு தெரியாது. பனைத் தோப்பில் இருந்து இடைக்கிடையே துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுக்கொண்டே இருக்கும். முன்னேற முற்பட்ட ஓரிரு ஜவான்களும் சரியாக குறிபார்த்து சுடப்பட்டு; வீழ்த்தப்பட்டுவிடுவதால் மற்றய இந்தியப் படைவீரர்கள் தொடர்ந்து முன்னேறப் பயந்து நிலை எடுத்துப் பதுங்கிவிடுவார்கள்.

பனங்காணியை நோக்கி சகட்டுமேனிக்கு சுட்டுத் தள்ளுவார்கள். ஓரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இவ்வாறு இந்த விளையாட்டு தொடரும். பனை மரத்தின் மீது பரன் அமைத்து தங்கியிருக்கும் புலி வீரரிடம் துப்பாக்கிச் சன்னம் தீர்ந்து அவர் அங்கிருந்து நகர்ந்த பின்னர் அல்லது அவர் வீர மரணம் அடைந்த பின்னர்தான் இந்தியப் படையினருக்கு தாம் ஏமாந்திருந்த விடயம் தெரியவரும். தமது இயலாமையை நினைத்து வெட்கப்படுவார்கள்.

அதேவேளை இதுபோன்ற சம்பவங்களை மனதில் வைத்துக்கொண்டு வியூகங்களை மாற்றி அமைத்து இந்தியப் படையினர் மண் கௌவ்வியதும் உண்டு. சில சந்தர்ப்பங்களில் பனங்காணிகளில் இருந்து புறப்படும் ஓரிரு துப்பாக்கி வேட்டுக்களைப் பார்த்துவிட்டு அங்கு ஒரு புலிப் போராளி மட்டும்தான் இருப்பார் என்று நினைத்து அள்ளி அடித்துக்கொண்டு பனங்காணிக்குள் நுழையும் இந்தியப் படையினர் நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகளால் சுற்றிவழைக்கப்பட்டு ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் பலவும் உள்ளன.

புலிகளின் தாக்குதல்கள் எந்த வடிவில் எங்கிருந்து எப்பொழுது மேற்கொள்ளப்படும் என்று இந்தியப் படையினருக்கு புரியாமல் இருந்தது. சந்தர்ப்பவசமாக அவற்றை அவர்கள் எதிர்கொண்ட போது வியப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டிருந்தார்கள்.

தாம் மிகவும் இலகுவாக நினைத்து சண்டையை ஆரம்பித்திருந்த விடுதலைப் புலிகள் ஒன்றும் சாமான்யமானவர்கள் அல்ல. உயர்ந்த இலட்சியத்துடன் பயிற்றப்பட்டு உறுதியுடன் வளர்க்கப்பட்டு உயிரைக் கூட மதிக்காது போராடும் வல்லவர்களை தாம் சமாளிக்கவேண்டும் என்பதை இந்தியப் படையினர் படிப்படியாக உணர ஆரம்பித்தார்கள்.

தாங்கிகளை நம்பிய இந்தியப் படை:
இந்தியப் படைத் தலைமைக்கு ஒரு விடயத்தில் நல்ல தெளிவு இருந்தது.
அதாவது விடுதலைப் புலிகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவர்கள். அதிகளவு போராளிகள் அவர்களிடம் கிடையாது. புலிகள் அமைப்பில் சுமார் 1500 பேர் அளவில்தான் இருப்பார்கள். அதுவும் அவர்கள் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை யாழ்ப்பாணம் மன்னார் என்று பல இடங்களிலும் பரந்துதான்; நிலைகொண்டிருப்;பார்கள். யாழ் குடா முழுவதுமாக பல முனைகளில் முன்னேறிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்தியப் படையினரை ஒரு சில போராளிகளால் சமாளிக்கவே முடியாது என்பதில் இந்தியப் படை உயரதிகாரிகள் மிகவும் உறுதியாக இருந்தார்கள்.

அத்தோடு இந்தியப் படையினர் அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பித்திருந்த யுத்த தாங்கிகளும் புலிகளுக்கு எதிரான சண்டைகளில் பாரிய வெற்றிகளைப் பெற்றுத் தந்துவிடும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

ஆனால் பல சந்தர்ப்பங்களில் புலிகள் வகுத்திருந்த வியூகங்கள் அவர்கள் மேற்கொண்ட புதிய போர் உத்திகள் இந்தியப் படை அதிகாரிகளின் எண்ணங்களில் மண்ணை அள்ளிப் போட்டிருந்தன.


பல முனைகளில் முன்னேறிய இந்தியப் படை அணிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இடைமறித்து தாக்கப்படுவார்கள். சண்டைகள் மிகவும் உக்கிரமாக நடைபெறும். இந்தியப் படையினர் முன்னேறவே முடியாதபடிக்கு தாக்குதல்கள் மிகவும் தீவிரமாக இருக்கும். ~~சரி புலிகள் இந்த இடத்தில் மிகவும் பலமாக இருக்கின்றார்கள் தொடர்ந்து முன்னேறுவது அவ்வளவு உசிதம் அல்ல. திரும்புவதே புத்திசாலித்தனம்|| என்று நினைத்துக்கொண்டிருக்கையில் புலிகள் தரப்பில் இருந்து காண்பிக்கப்பட்டுக்கொணடிருந்த எதிர்ப்புக்கள் திடீரென்று நின்றுவிடும். புலிகள் பக்கமிருந்து ஒரு வேட்டுத்தானும் தீர்க்கப்படமாட்டாது. புலிகள் முற்றாகவே தமது தாக்குதல்களை நிறுத்திவிடுவார்கள்.

அடுத்து என்ன செய்வது என்று இந்தியப் படையினர் தடுமாறுவார்கள். தொடர்ந்து முன்னேறுவதா? அல்லது திரும்புவதா? தீர்மாணம் எடுக்கமுடியாது படை அதிகாரிகள் தடுமாறுவார்கள்.

புலிகள் பலமுடன் இருக்கும் பிரதேசத்தினுள் தொடர்ந்து முன்னேறினால் தாம் சுற்றிவழைக்கப்பட்டுவிடுவோமோ என்ற பயம் அவர்களை பிடித்துக்கொள்ளும். புலிகள் தரப்பில் இருந்து தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுவிட்டதால் திரும்பவும் மனமில்லை. தீர்மாணம் எடுக்கமுடியாமல் நாள் முழுவதும் யோசிப்பார்கள். யுத்த தாங்கிகளை முன்நிறுத்தி படை முன்னேற்றத்திற்கு வியூகம் வகுப்பார்கள். இந்தியப் படையினருக்கு அப்பொழுது உதவி புரிய ஆரம்பித்திருந்த மாற்றுத் தமிழ்க் குழுக்களின் உறுப்பினர்களை கிராமங்களினுள் அனுப்பி தகவல்சேகரித்தபோது அவர்களுக்கு பாரிய ஆச்சரியம் ஏற்படும்.

எதிர்முனையில் ஒரு புலி உறுப்பினர் கூட இல்லை என்று திரும்பிவந்த தமிழ் குழு உறுப்பினர்கள் கூறுவார்கள்.

ஆரம்பத்தில் அந்த தகவலையும் சந்தேகித்து பின்னர் ஒருவாறு உண்மையை உறுதிசெய்துகொண்டு முன்னேற நினைக்கும்போது புலிகள் இந்தியப் படையினருக்கு பின்புறமாக தாக்குதல்களை ஆரம்பித்திருப்பார்கள். தாங்கிகளை முன்நிறுத்தி முன்னேற நினைத்திருக்கையில் புலிகள் திடீரென்று பின்புறம் இருந்து தாக்க ஆரம்பித்ததால் இந்தியப் படையினர் நிலை குலைந்து போய்விடுவார்கள்.

புலிகளுக்கும் இந்தியப் படையினரின் யுத்த தாங்கிகளுக்கும் இடையில் இப்பொழுது இந்தியப் படை ஜவான்கள். யுத்த தாங்கிகளை பயன்படுத்த முடியாது. இந்தியப் படையினர் தமது பழமைவாய்ந்த எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளை இயக்கும் முன்பதாகவே அவர்களில் பலர் புலிகளின் நவீன ஏ.கே.47 இயந்திரத் துப்பாக்கிகளுக்குப் பலியாகி வீழ்ந்துவிடுவார்கள்.

இவ்வாறு இந்தியப் படையினரின் அதிக எண்ணிக்கையிலான படைவீரர்கள் மற்றும் அவர்கள் முன்நிலைப்படுத்தி பயன்படுத்திய யுத்த தாங்கிகள் என்பன கூட பல சந்தர்ப்பங்களிலும் செயலற்றவையாகவே மாற்றப்பட்டிருந்தன - புலிகளின் புதிய போர் யுக்திகளினால்.

பின்னடைவை ஏற்படுத்திய கன்னிவெடிகள்:
அடுத்ததாக புலிகளின் கன்னி வெடிகள் இந்தியப் படையினருக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தன. கன்னி வெடிகள் எந்த ரூபத்தில் மறைந்திருக்கும் என்பதை இந்தியப்படையினரால் கற்பனை செய்யவே முடியவில்லை. தெருவோரம் கைவிடப்பட்டிருக்கும் துவிச்சக்கர வண்டிகூட இந்தியப் படையினர் அருகில் செல்லும்போது வெடித்துச் சிதறும்.

வீதிகளில் அமைந்திருக்கும் மதகுகளின் கீழ்தான் கன்னிவெடிகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் என்றில்லை. தாரிட்டு நன்றாகப் பூசி மெழுகிக் காணப்படும் தெருக்கள் கூட திடீரென்று வெடித்து பாரிய அழிவுகளை ஏற்படுத்திவிடும். தெருக்களிலும் வீதியோரங்களிலும் கன்னிவெடி பொருத்தப்பட்டிருக்கும் என்று அவதானித்து மிகவும் கவனத்துடன் நகர்ந்துகொண்டிருக்கும் போது மின் கம்பங்களின் மேலே இருந்து கிளைமோர் வெடித்து பல இந்தியப் படையினர் கொல்லப்பட்டுவிடுவார்கள்.

இந்தியப் படையினரைப் பொறுத்தவரை ஈழ மண்ணில் அவர்களை அதிக அச்சத்திற்குள்ளாக்கிய ஒரு விடயம் என்னவென்றால் புலிகள் மேற்கொண்ட கன்னி வெடித்தாக்குதல்கள் என்றால் மிகையாகாது.


இந்தியாவின் யுத்த அனுபவம்:
இந்தியப் படையினர் 1971ம் ஆண்டே கடைசியாக யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள். பாக்கிஸ்தானுடன் இந்தியா மேற்கொண்டிருந்த அந்த யுத்தத்திற்கு பின்னர் இந்தியப் படையினருக்கு யுத்த அனுபவம் அவ்வளவாகக் கிடையாது. காலிஸ்தான் சீக்கியத் தீவிரவாதிகளை அடக்குவதற்காகப் பஞ்சாப் பொற்கோவிலில் இந்தியப் படையினர் மேற்கொண்டிருந்த `புளுஸ்டார்` படை நடவடிக்கை (Operation Blue star) தவிர 16 வருடங்களாக இந்தியப் படை யுத்த நடவடிக்கைகள் எதிலுமே ஈடுபட்டது கிடையாது.

திடீரென்று ஈழத்தில் புலிகளுடன் இந்தியப் படையினர் யுத்தத்தில் குதிக்கவேண்டி ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தியப் படையினர் தடுமாறித்தான் போனார்கள்.

அதுவும் புலிகள் இந்தியப் படையினருக்கு தொடர் இழப்புக்களை வழங்கிவர அவற்றை வெற்றி கொள்ள முடியாத இந்தியப் படையினர் தமது இயலாமையை அப்பாவி மக்கள் மீது காண்பிக்க ஆரம்பித்திருந்தார்கள். புலிகளை வெற்றிகொள்ளமுடியாத இந்தியப் படையினர் தமது கோபத்தை அப்பாவி ஈழத் தமிழர்கள் மீது செலுத்தினார்கள். நூற்றுக்கணக்கான மக்களை கொன்றொழித்தார்கள். கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அழித்தார்கள். அவர்கள் ஈழ மண்ணில் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட யுத்தம் இப்படித்தான் அமைந்திருந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இலங்கையில் இந்தியப் படையினர் தமது கைகளில் ஒன்றைப் பின்னால் கட்டிக்கொண்டு யுத்தம் புரிந்து வருவதாக இந்தியா கூறியதுதான்.

அந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையான இந்தக் கூற்றை இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஊடகங்களுக்கு கூறிக்கொண்டிருக்கும் போது இந்தியப் படையின் ஒரு அணி யாழ் வைத்தியசாலைக்குள் பாரிய மனித வேட்டை ஒன்றை நடாத்தப் புறப்பட்டிருந்தது. 
பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us